பிபிசியின் 2021ஆம் ஆண்டின் 100 பெண்கள்

  • லிமா ஆஃப்ஷித்

    ஆப்கானிஸ்தான் கவிஞர்

    விருதுபெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர். ஆப்கான் கலாச்சாரத்தில் நிலவும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளை கேள்வி எழுப்பும் வகையில் இவருடைய கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அமைந்துள்ளன.

    இதழியல் படிப்பை முடித்த பின்னர், 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுயாதீன பத்திரிகையாளராகவும் சமூக கருத்தாளராகவும் இருந்தார்.

    ஷெர்-இ-டனேஷ்கஹ் எனப்படும் காபூல் பல்கலைக்கழக கவிதைச் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பெருந்தொற்றுக் காலத்தில், அச்சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு சுகாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், மெய்நிகர் கவிதை அமர்வுகளை நடத்தியதன் வாயிலாக, அவர்களின் சமூக தொடர்பை நிலைநிறுத்த உதவியது.

    *இருபது ஆண்டுகளாக நாம் போராடிய அதே சேற்றில் மீண்டும் மூழ்குவது போன்றது ஆப்கானிஸ்தான் வீழ்ச்சி. எனினும், காட்டின் இருளில் ஒளியை நோக்கி நாம் ஒரு கிளையைப் போல உயர முடியும் என நம்புகிறேன்.

  • ஹலிமா ஏடன்

    கென்யா தொண்டூழிய செயல்பாட்டாளர் மற்றும் முன்னாள் மாடல்

    ஹிஜாப் அணிந்த முதல் சூப்பர்மாடலான ஹலிமா ஏடன், சோமாலி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் கென்யாவில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர். 2017ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய மாடலிங் ஏஜென்சிகளில் ஒன்றான IMG மாடல்ஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். மாடலிங் செய்யும் போது தனது ஹிஜாபைக் கழற்றச் சொல்லக்கூடாது என்று தனது ஒப்பந்தத்தில் ஒரு விதியைச் சேர்த்தார்.

    பிரிட்டிஷ் வோக், அல்லூர் அண்ட் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் இதழின் நீச்சலுடை பதிப்பின் அட்டைப்படத்தில் ஹிஜாப் அணிந்து இடம்பெற்ற முதல் மாடல் இவர். இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பார்வையை மேம்படுத்த ஏடன் பிரச்சாரம் செய்தது மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்கான யுனிசெஃப் தூதராக இருந்தது.

    இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதியதால், 2020 ஆம் ஆண்டில் அவர் மாடலிங்கில் இருந்து விலகினார். ஆனால் அவர் ஃபேஷன் துறையிலும் அதற்கு அப்பாலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    *தொற்றுநோய்களின் போது நம்மைப் பாதுகாக்க நமது முன்களப் பணியாளர்கள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை கண்டிருக்கிறோம். அவர்களின் தியாகங்களை நாம் போற்ற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நன்றியுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் உலகை மீட்டமைக்க முடியும்.

  • ஒலியேமி அடெடிபா-ஓரிஜா

    நைஜீரியா நிறுவனர் - ஹெட்ஃபோர்ட் அறக்கட்டளை

    குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் முற்றிலும் பெண்களைக் கொண்ட சட்ட நிறுவனமான ஹெட்ஃபோர்ட் அறக்கட்டளையின் நிறுவனர். இது இலவச சட்டச் சேவைகளை வழங்குகிறது.

    லாகோஸைத் தளமாகக் கொண்ட, நான்கு நபர்களைக் கொண்ட சட்டக் குழு, ஜாமீன் பெற முடியாத ஏழை மற்றும் தவறாக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கும், நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் இருப்போருக்கும் உதவுகிறது. (நைஜீரியாவில், சிறையில் இருப்போரில் 70 சதவிகிதம் பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர்). ஒலியேமி அடெடிபா-ஓரிஜா மற்றும் அவரது குழு சிறார் குற்றவாளிகள் மீது கவனம் செலுத்துகிறது. அவர்களுக்கு சிறைக்கு வெளியே வாழ்க்கையை அமைக்க உதவுகிறது.

    இது 2018 இல் செயல்படத் தொடங்கியதிலிருந்து, சிறிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட 125 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவச சட்ட உதவியை வழங்கியுள்ளது.

    *உலகை மீட்டமைப்பதில் நாம் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. உலகத்தில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நல்ல காரணங்களை ஆதரிப்பது, பேசவது, வாதிடவது என ஏதாவது ஒரு வகையில்.

  • முகாதஸா அஹ்மத்சாய்

    கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் இருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்வதற்காக 400 க்கும் மேற்பட்ட இளம் பெண் செயற்பாட்டாளர்களின் வலையமைப்பை உருவாக்கினார் முகாதஸா அஹ்மத்சாய். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.

    ஒரு சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராக கொரோனா பரவலின்போது தவறான தகவல்களுக்கு மத்தியில் பெண்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவினார். அவர் ஆப்கானிஸ்தானின் இளைஞர் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக வாதிட்டார்.

    அமைதியை உருவாக்குவது மற்றும் மோதல்களைத் தீர்ப்பது ஆகிய காரணங்களுக்காக சிறந்த பெண்களுக்கு ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் வழங்கப்பட்ட N-Peace விருதை 2018-ஆம் ஆண்டில் முகாதஸா பெற்றார்.

    *இதுபோன்ற திடீர் மாற்றத்தை நான் கண்டதில்லை - இதற்கு முன் எந்த அரசாங்கமும் இல்லாததுபோலத் தோன்றியது. இளைய தலைமுறை இந்த இடைவெளியை நிரப்பி அமைப்பைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதே ஒரே நம்பிக்கை. ஆயினும் அது உலக நாடுகளின் ஆதரவுடன் மட்டுமே சாத்தியமாகும்

  • ராடா அக்பர்

    ஆப்கானிஸ்தான் ஓவியர்

    பெண் வெறுப்பும் அடக்குமுறையில் இந்தப் பெண் ஓவியரின் படைப்புகளில் மையக் கருவாக இருக்கிறது. ராடா அக்பர் இந்த ஊடகத்தை பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்கவேண்டிய அங்கீகாரத்தைப் பற்றிப் பேசவும் பெற்றுத் தரவும் எப்போதும் பயன்படுத்துகிறார்.

    2019-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் பெண்களின் பங்கைப் போற்றும் வகையில் சர்தேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி சூப்பர்வுமன் (அபார்ஸனன்) என்ற கண்காட்சிகளை நடத்தினார்.

    அரசியல், பொருளாதார, மத விவகாரங்களில் பெண்களை அவமதிக்கும் சமூகச் சட்டங்களை கண்டிப்பதற்கு தனது கலை உதவும் என அவர் நம்புகிறார்.

    *ஆப்கானிஸ்தானும் அதன் குடிமக்களும் தீவிரவாதிகளாலும் உலகத் தலைவர்களாலும் கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால் ஒரு தேசமாக முன்னேறுவதற்கான பணிகளை ஒருபோதும் நாம் நிறுத்தியதில்லை. வளமான சுதந்திரமான ஆப்கானிஸ்தானில் மீண்டும் நாம் வாழப்போகிறோம்.

  • ஏபியா அக்ரம்

    பாகிஸ்தான் மாற்றுத் திறனாளித் தலைவர்

    மாற்றுத் திறனாளியான ஏபியா அக்ரம், 1997ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தில் செயல்பாட்டாளராக இருந்து வருகிறார். மாணவியாக இருந்த காலத்தில் அவர் சிறப்பு திறன் பரிமாற்ற திட்டத்தை (STEP) தொடங்கினார்.

    காமன்வெல்த் இளம் ஊனமுற்றோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த முதல் பெண் இவர். மாற்றுத்திறனாளி பெண்களுக்கான தேசிய மன்றத்தின் நிறுவனர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் உள்ளடக்கிய மேம்பாடு தொடர்பான ஐ.நா. உறுதிமொழியை அமல்படுத்துவதற்காக போராடி வருபவர்

    ஐ.நா. 2030 திட்டங்கள் மற்றும் அதன் நிலையான வளர்ச்சி இலக்குகளில் மாற்றுத்திறனாளிகள் நலன்களைச் சேர்க்க அவர் பணிபுரிகிறார்.

    *கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு உலகை மீட்டமைக்க, 'புதிய இயல்பு' கட்டமைக்கப்படும் நமது சமூகங்களின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு நாம் கூட்டாகச் செயல்பட வேண்டும். இதன் பயனாக மிகவும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காணலாம்.

  • லீனா ஆலம்

    ஆப்கானிஸ்தான் திரைக்கலைஞர்

    விருது பெற்ற தொலைக்காட்சி, திரைப்பட, அரங்கக் கலைஞர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர். தொலைக்காட்சிகளில் ஷெரீன் மற்றும் ஃபர்குண்டா கொலை உள்ளிட்ட பெண்ணியம் தொடர்பான நிகழ்ச்சிகளின் வழியே அறியப்பட்டவர். இதில் ஃபர்குண்டா என்பவர், குரானை எரித்ததாக பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு, பொது இடத்தில் ஆண்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஆப்கான் பெண் ஆவார்.

    1980களில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய ஆலம், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இருப்பினும், தன் தாய்நாடு குறித்த கதைகளை தொடர்ந்து சொல்லி வருகிறார்.

    2009-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கான ஐநாவின் உதவி மிஷன் சார்பில், அமைதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.

    *இவ்வளவு ரத்தத்துடனும் தியாகத்துடனும் மீண்டும் கட்டியெழுப்ப எங்களுக்கு பல தசாப்தங்கள் தேவைப்பட்டன. கண் இமைக்கும் நேரத்தில் அவை தரையில் விழுவதைப் பார்ப்பது வலிமிகுந்தது. எனினும், இம்முறை வலுவான அடித்தளத்துடன் போர் தொடரும்.

  • டாக்டர் அலேமா

    ஆப்கானிஸ்தான் தத்துவவாதி மற்றும் செயற்பாட்டாளர்

    தத்துவம் மற்றும் சமூக அறிவியல் அறிஞரான டாக்டர் அலமா மனித உரிமைகள் மற்றும் அமைச்சகத்தின் துணை அமைச்சராக இருந்தார். அவர் சுயாதீனமான பெண்களின் அரசியல் பங்கேற்புக் குழுவின் நிறுவனரும் பிரபலமான பெண்களின் உரிமை ஆர்வலரும் ஆவார்.

    ஜெர்மனியில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் அலேமா போர் ஆய்வில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவனத்தைக் கொண்டிருக்கிறார்.

    ஜெர்மானிய-ஆப்கானிய சர்வதேச உறவுகள் மற்றும் ஆப்கானிய பெண்களின் அதிகாரமளிப்பது பற்றிய புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அகதிகள், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்த நபர்கள் மீது கவனம் செலுத்தும் மனிதாபிமான சட்டத்தின் தொழில்முறை பயிற்சியாளராகவும் நடுவராகவும் இருக்கிறார்.

    *நவீன அரசியல் சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஆப்கானிஸ்தானே எனது கனவு. அதில் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பங்கேற்கும் வகையிலான உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

  • சேவ்டா அல்துனோலுக்

    துருக்கி தொழில்முறை கோல்பால் வீராங்கனை

    பிறந்தது முதல் பார்வை மாற்றுத் திறனாளியான இவர், சேவ்டா அல்துனோலுக் ஒரு தொழில்முறை கோல்பால் வீராங்கனை (மூன்று பார்வை மாற்றுத் திறனாளிகள் அல்லது கண்களைக் கட்டிக் கொண்டவர்கள் மணிகள் கட்டப்பட்ட பந்தை எதிரணியின் வலையை நோக்கி எறியும் விளையாட்டு)

    உலகின் சிறந்த கோல்பால் வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படும் இவர், 2018-ஆண்டில் மாதத்தின் சிறந்த வீராங்கனை என்ற சர்வதேச பாராலிம்பிக் சங்கத்தால் அறவிக்கப்பட்டார். இரு பாராலிம்பிக், இரு உலக சாம்பியன்ஷிப் மற்றும் மூன்று ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றவர். 2016 ரியோ மற்றும் 2020 டோக்யோவில் துருக்கிய பெண்கள் அணி பாராலிம்பிக் தங்கத்தை வெல்ல உதவினார்.

    அனடோலியாவின் டோகட்டில் பிறந்த இவர், அங்காராவில் உடற்கல்வி பட்டம் பெற்றவர்.

    *உடல் குறைபாடு என்பதை ஒரு தடையாகப் பார்க்கக் கூடாது. மாறாக சுய வெளிப்பாட்டுக்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

  • வஹிதா அமிரி

    ஆப்கானிஸ்தான் நூலகர் மற்றும் போராட்டக்காரர்

    சட்டப் பட்டதாரியான வஹிதா அமிரி நூலகர், புத்தகப் பிரியர் மற்றும் போராட்டக்காரர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு அவரால் தனது நூலகத்தில் வேலை செய்ய முடியவில்லை. அதனால் அவர் வீதியில் இறங்கிப் போராடத தொடங்கினார். உரிமைகளையும் கல்வியையும் கோரும் ஆப்கன் பெண்களின் குரலை ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தைக் கோரும் வகையில் எண்ணற்ற பெண்கள் பங்கேற்ற ஒரு கூட்டுப் பேரணியை நடத்தினார்.

    போராட்டங்களை தாலிபன்கள் தடை செய்த பிறகு, மற்ற பெண்களுடன் கூடி வாசிப்பையும் விவாதத்தையும் ஊக்குவித்தார்.

    அவரது நூலகம் 2017 முதல் இயங்கி வருகிறது. புத்தகங்கள் இல்லாமல், தனது அடையாளத்தை இழந்துவிட்டதாக அமிரி கூறுகிறார்.

    *உலகம் நம்மை மனிதர்களாக மதிக்கவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் அழிவைச் சந்திக்கும் போது, நீதி கோரும் ​​போராட்டங்கள், புத்தக வாசிப்பு மூலம் நம்பிக்கையை மீட்டெடுக்கிறோம்.

  • மோனிகா அரேயா

    கோஸ்டா ரிகா உமிழ்வற்ற போக்குவரத்து ஆர்வலர்

    உமிழ்வு இல்லாத போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்த பணிபுரியும் ஒரு பருவநிலை நிபுணராக, மோனிகா அராயா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரப்புரைகளை முன்னின்று நடத்தியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனது நாட்டை முதல்நிலைக்குக் கொண்டுவரக் காரணமான, குடிமக்களைக் கொண்ட முன்முயற்சியான 'கோஸ்டா ரிகா லிம்பியா' பரப்புரையும் அவற்றுள் ஒன்று.

    போக்குவரத்து பிரச்னைகளில் காலநிலை நடவடிக்கைக்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகராக உள்ளார் அராயா. பூஜ்ஜிய-உமிழ்வு போக்குவரத்துக்கான ரூட்ஜீரோ என்ற பரப்புரையின் ஆலோசகராகவும் உள்ளார். க்ளைமேட்வொர்க்ஸ் அறக்கட்டளையிலும் இணைந்து செயல்படுகிறார்.

    அவரது TEDTalks கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 31 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2016 இல், அண்டார்டிகாவுக்குச் சென்ற உலகின் மிகப்பெரிய முற்றிலும் பெண்களைக் கொண்ட ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றார்.

    *'வழக்கமானது' என நாம் பார்ப்பதை மீட்டமைப்பதற்கான நேரம் இது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான நமது தேவையைக் குறைப்பது மிகவும் அவசியம். மேலும் இது மிகவும் தேவையான பிற சமூக மாற்றங்களுக்கு அரசியல் ஆதரவை உருவாக்க உதவும்.

  • நடாஷா ஆஸ்கார்

    பிரிட்டன் வெல்ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்

    இந்த ஆண்டு வெல்ஷ் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவியேற்ற முதல் நிறப் பெண் என்ற வரலாறு படைத்துள்ளார். வெல்ஷ் நாடாளுமன்றம் 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

    பழைமைவாத கட்சியின் உறுப்பினர் மற்றும் தெற்கு வேல்ஸின் கிழக்குப் பகுதியுடைய நாடாளுமன்றத்தின் பிராந்திய உறுப்பினரான் நடாஷா ஆஸ்கார், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிழல் அமைச்சராகவும் இருக்கிறார். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே வேல்ஸ் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாகவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் பயண அட்டையை அறிமுகப்படுத்த முயன்று வருகிறார்.

    அரசியலுக்கு வருவதற்கு முன், அவர் வங்கியாளராக, தொகுப்பாளராக, வானொலி வாசிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

    *ஒன்றிணைந்து, புதிய இயல்பை நோக்கிய கடினமான பாதையில் நாம் பயணிக்கவேண்டும். வாழ்வை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடிய வாய்ப்புகளைப் பிடித்துக்கொண்டு, அதை நோக்கிச் செயல்படவேண்டும்.

  • ஸுஹல் அத்மர்

    ஆப்கானிஸ்தான் தொழில்முனைவோர், குல்-இ-முர்சல் மறுசுழற்சி ஆலை

    ஆப்கானிஸ்தானின் முதல் காகித மறுசுழற்சி ஆலையான குல்-இ-முர்சலை பெண் தொழில்முனைவோரான ஸுஹல் அத்மர் நிறுவினார். பொருளாதார மற்றும் தொழில் பின்னணி கொண்டிருந்த அவர் பெண் தலைமையிலான தொழிற்சாலையை 2016-இல் தொடங்கினார். அது 100 வேலைவாய்ப்பை உருவாக்கியது. அவற்றில் ஆலை வேலை முதல் சந்தைப்படுத்துதல் வரை 30 சதவிகிதம் பெண்களுக்குச் சென்றது.

    இந்த நிறுவனம் தன்னார்வ அமைப்பிடம் இருந்து ரகசிய ஆவணங்கள் அற்ற காகிதங்களைச் சேகரித்து, சுமார் 35 டன் அளவு காகித்தை ஒரு வாரத்தில் கழிப்பறை காகிதமாக மாற்றி நாடு முழுவதும் விற்பனை செய்கிறது.

    ஆப்கானிஸ்தானில் ஒரு நிறுவனத்தை அமைப்பது நடத்துவதற்கான நிதி உதவியைப் பெறுவதற்கு பெண்களுக்கு எவ்வளவு சிரமம் உள்ளது என்பது பற்றி அத்மர் குரல் கொடுக்கிறார்.

    *எதிர்காலம் எப்படி இருக்கும்? இளைஞர்கள் மற்றும் பெண்களின் கனவுகள், இலக்குகள் மற்றும் நம்பிக்கைகள் அழிக்கப்பட்டுள்ளன.

  • மார்சிலினா பாடிஸ்டா

    மெக்சிகோ தொழிற்சங்க தலைவர்

    வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த மார்சிலினா பாடிஸ்டா, 21 ஆண்டுகளுக்கு முன்பு தாம் நிறுவிய வீட்டுவேலை செய்வோருக்கான மெக்சிகோவின் ஆதரவு மற்றும் பயிற்சி மையத்தின் (CACEH) இயக்குநராக உள்ளார். நியாயமான ஊதியம், மருத்துவ விடுப்பு உட்பட மற்ற தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகளைப் பெறவும் அவர்களின் சமூக நிலையை மேம்படுத்தவும் அவர் போராடுகிறார்.

    பாடிஸ்டா தொடங்கிய இயக்கம் தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கான கல்வியை ஒருங்கிணைக்கிறது. வீட்டு வேலை செய்வோரை சுரண்டல், வன்முறை பணிப்பாதுகாப்பற்ற நிலைகளில் இருந்து காக்கும் பன்னாட்டு தொழிலாளர் உடன்பாட்டில் மெக்சிகோ அரசு சேருவதற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளில் பாடிஸ்டா பங்கேற்றார்.

    2010 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஃபிரெட்ரிக் ஈபர்ட் ஸ்டிஃப்டுங்கின் சர்வதேச மனித உரிமைகள் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    *உலகத்தை மாற்றுவது என்பது மற்றவர்கள் தொழில்ரீதியாக முன்னேறும்போது, வீட்டில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் உள்பட லட்சக்கணக்கான வீட்டுப் பணியாளர்களின் நிலைமைகளை மாற்றுவதாகும். வீட்டு வேலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தால்தான் இந்த சமூக சமத்துவமின்மை முடிவுக்கு வரும்.

  • க்ரிஸ்டல் பாயட்

    ஆப்கானிஸ்தான் செயற்பாட்டாளர்

    சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான இவர், 2021-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் தாலிபான் கட்டுக்குள் வந்தபின் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் அறியப்பட்டவர்.

    ஆகஸ்ட் 19 அன்று, ஆப்கானிஸ்தான் சுதந்திர தின நாளில் காபூல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உதவிய ஏழு பெண்களில் இவரும் ஒருவர். அரசியல் மேலாண்மை துறையில் பிஹெச்டி ஆய்வை இந்தாண்டு தொடங்கினார். ஆனால், ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுக்குள் வந்தபின்னர், அந்த ஆய்வு தடைப்பட்டது.

    தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அங்கிருந்து ஆப்கான் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். பிஹெச்டி ஆய்வை முடிக்கலாம் என நம்பும் அவர், புத்தகம் எழுதவும் திட்டமிட்டுள்ளார்.

    *ஆப்கானிஸ்தானில் வருங்காலத்தில் நடைபெறும் எந்த ஜனநாயக மாற்றத்திலும் நான் பங்குகொள்ள விரும்புகிறேன். ஐநாவில் பேச வேண்டும் என்பது என் கனவு. ஏனெனில், உண்மையான ஆப்கானியர்கள் குறிப்பாக பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த உலகம் கேட்க வேண்டும் என நம்புகிறேன்.

  • ரஸியா பரக்ஸாய்

    ஆப்கானிஸ்தான் போராட்டக்காரர்

    அதிபர் மாளிகை உள்பட அரசின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய ரஸியா, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு வேலை இல்லாதவராக மாறினார்.

    அப்போது முதல் காபூலில் வேலை செய்யவும் கல்விக்காகவும் நடத்தப்பட்ட எண்ணிடலங்கா வீதிப் பேரணிகளில் தீவிரமாகப் பங்கேற்ரார். அச்சத்தால் ஆப்கானிய பெண்கள் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுவதைக் குறிக்கும் வகையிலான #AfghanWomenExist என்ற முழக்கத்தை உருவாக்கிய பெண்களில் இவரும் ஒருவர்.

    சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் துறையில் பட்டமும், எம்.பி.ஏ.வும் பயின்றவர் பரக்ஸாய். அடிமையாக வாழ்வதை விட விடுதலைக்காகச் சாவதே மேல் என்று பிபிசிக்கு எழுதிய கடிதத்தில் தனது போராட்டங்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்லார்.

    நாட்டின் கல்விகற்ற இளம் சமூகம் - குறிப்பாக ஆப்கானிஸ்தானின் துணிச்சலான போர் வீராங்கனைகள் - ஒரு நாள் விடுதலைக் கொடியை ஏந்துவார்கள். இதை வீதிகளில் நடக்கும் போராட்டங்கள் வழியாக நான் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • நிலோஃபர் பாயத்

    ஆப்கானிஸ்தான் சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனை

    ஆப்கானிஸ்தான் தேசிய சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியின் தலைவரும், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆர்வலருமான நிலோஃபர் பாயத், தாலிபன்களிடம் இருந்து தப்புவதற்காக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். கணவரும், மற்ரொரு சக்கர நாற்காலி கூடைப்பந்து வீரருமான ரமீஷும் தாமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள்.

    அவருக்கு இரண்டு வயதாகஇருந்தபோது, ஒரு ராக்கெட் அவரது வீட்டைத் தாக்கியதில் அவரது சகோதரர் இறந்துபோனார். நிலோஃபருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. காபூலின் மையத்தில் உள்ள ஒரு திறந்தவெளி மைதானத்தில் முதன் முதலாக கூடைப்பந்து ஆடினார். அது ஆப்கானிஸ்தானின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருப்புமுனையாக அமைந்தது. தாய்நாட்டில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்காக குரல் கொடுக்கும் அவர், ஆப்கானிஸ்தான் பெண்களுக்காக ஒரு சங்கத்தை அமைத்துள்ளார்.

    மீண்டும் கூடைப்பந்து ஆட முடியும் என்று பாயத் நம்புகிறார்.

    *ஆப்கானிஸ்தானில் ஆட்டம் முடிந்துவிட்டது என்று என்று நம்புகிறேன். போருக்கான விலையை இன்னொரு விநாடியும் செலுத்தமாட்டோம். மக்களின் முகங்களில் உண்மையான புன்னகையைப் பார்க்க விரும்புகிறேன்.

  • ஜோஸ் பாய்ஸ்

    பிரிட்டன் கட்டடக் கலைஞர்

    இது மாற்றுத்திறனாளி கலைஞர்களை ஒன்றிணைத்து, புதுமையான அணுகல் முறைகள் உள்ளடக்கிய வடிவங்களை உருவாக்குகும் தி டிஸ்ஆர்டினரி ஆர்கிடெக்சர் திட்டத்தின் இணை இயக்குநர்.

    பணியையும் செயல்பாட்டையும் ஒருங்கே இணைத்த ஒரு கட்டடக் கலைஞராக 1980களில் மேட்ரிக்ஸ் ஃபெமினிஸ்ட் டிசைன் கலெக்டிவ் அமைப்பை இணைந்து நிறுவினார். மேக்கிங் ஸ்பேஸ்: வுமன் அண்ட் தி மேன் மேட் என்விரன்மென்ட் புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவர். பல சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். கட்டடக்கலை வடிவமைப்பில் உள்ள அனுமானங்களை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள பெண்ணிய இடம்சார்ந்த நடைமுறைகளை ஆய்வு செய்தவர்.

    40 ஆண்டுகால வாழ்க்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக நமது அன்றாட சமூக மற்றும் பொருள்சார்ந்த நடைமுறைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

    *கடந்த ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற விளிம்புநிலை மக்களின் பல்வேறு வகையான அனுபவங்களை நாம் மையப்படுத்த வேண்டும்: கூட்டு நலன் மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் இடங்களாக நமது கட்டுமான சுற்றுப்புறங்களை மீட்டமைப்பதற்கு இதை ஓர் ஆக்கப்பூர்வமான ஊக்கியாக இதை அங்கீகரிப்பது.

  • கேத்தரின் கோர்லெஸ்

    அயர்லாந்து உள்நாட்டு வரலாற்றாசிரியர்

    அவர் கால்வேயில் உள்ள பான் செகோர்ஸ் தாய்-சேய் விடுதியில் 796 குழந்தைகள் மரணமடைந்த சம்பவத்தைப் புலனாய்வு செய்ததால், 'கண்ணியம் மற்றும் உண்மையின்’ பாதுகாவலர் என்று அறியப்பட்டார். திருமணமாகாத தாய்மார்களுக்கான ஐரிஷ் நிறுவனம் இருந்த இடத்தில் ஏராளனமான உடல்கள் புதைக்கப்பட்ட சவக்குழியைக் கண்டறிய ஒரு வரலாற்று ஆய்வாளராக கேத்தரினின் வலிமிகுந்த பல ஆண்டு ஆய்வு உதவியது. அங்கு 1920 களில் இருந்து 1950 கள் வரை நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் காணாமல்போனார்கள்.

    பெரும்பாலும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் இந்த நிறுவனங்கள் தொடர்பான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை இந்த ஆண்டு வெளியானது. பல்வேறு நோய்களால் 'கொடூரமான அளவில் குழந்தைகள் இறப்பு' இருப்பதை இவ்வறிக்கை கண்டறிந்து கூறியது. இது ஐரிஷ் அரசு மன்னிப்பு கேட்க வழிவகுத்தது.

    ‘நிகரற்ற மனிதாபிமான சேவையை’ அங்கீகரிக்கும் விதமாக பார் ஆஃப் அயர்லாந்து மனித உரிமைகள் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    *د نړۍ بدلول د میلیونونو کورنیوکارګرانودحالت بدلولوپه مانادي، زیاتره یې هغه ښځې دي چې په کورنوکې کارکوي پداسې حال کې چې نورپه خپل مسلک کې پرمختګ کوي. دا ټولنیزه نابرابري یواځې هغه مهال پای ته رسیدای شی چې د کورنيوکارګرانوکارپه رسمیت وپېژندل شي.

  • ஃபைஸா தர்கானி

    ஆப்கானிஸ்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்

    ஆப்கானிஸ்தானில் பருவநிலை மாற்றம் தொடர்பாகப் பணியாற்றும் ஒரு சிலரில் தர்கானியும் ஒருவர். உதவிப் பேராசிரியர் மற்றும் படாக்சன் மாகாணத்தின் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் முன்னாள் இயக்குநர். பெண்கள் உரிமைகளுக்காக வெளிப்படையாக குரல் கொடுப்பவர்.

    மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் நிலவியல் வடிவமைப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் உணவு உற்பத்திக்கு செங்குத்து சாகுபடி உள்ளிட்ட புதுமையான நுட்பங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் பெண்கள் சார்ந்த நீடித்த வளர்ச்சித் திட்டத்தை அமல்படுத்துவதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

    *கூட்டத்தில் தனித்து நிற்பது ஒரு துணிச்சலான முடிவு. கனவுகளைத் துரத்தி அவற்றை நனவாக்க வேண்டும். தூய மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் போரும் மாசுபாடும் இல்லாத நிலையே எனது கனவு.

  • அஸ்மினா த்ரோடியா

    பாலினம், தொழில்நுட்பம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் முன்னணி நிபுணரான அஸ்மினா த்ரோடியா தற்போது பம்பிள் என்ற டேட்டிங் செயலியின் பாதுகாப்புக் கொள்கையின் தலைவராகப் பணியாற்றுகிறார். அவர் ஜூலை 2021இல் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகத்தை கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதினார். அதில் 200க்கும் மேற்பட்ட பிரபலமான பெண்கள் கையெழுத்திட்டனர்.

    நச்சு ட்விட்டர்: பெண்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் என்ற அறிக்கையின் ஆசிரியராவார். இது பாலின அடிப்படையிலான துஷ்பிரயோகம் மற்றும் அதன் வர்க்க, இன குறுக்கீடு பற்றியது.

    பாலினம் மற்றும் தரவு உரிமைகள் குறித்த உலகளாவிய வலை அறக்கட்டளை மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு பாதுகாப்பான ஆன்லைன் வசதிகளை உருவாக்கினார்.

    *பெண்கள் தங்களுக்கென்ற ஆன்லைன் அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும் உலகம் எனக்கு வேண்டும். பெண்கள், குறிப்பாக ஒன்றுடன் ஒன்று மற்றும் குறுக்கிடும் அடையாளங்களைக் கொண்ட பெண்கள், இணையத்தை சமமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பயன்படுத்தக்கூடிய உலகமாக அது இருக்கவேண்டும்.

  • பஸ்தனா துர்ரானி

    ஆப்கானிஸ்தான் ஆசிரியர், லேர்ன் ஆப்கானிஸ்தான்

    LEARN Afghanistan அமைப்பின் நிறுவனரும் செயல் இயக்குநருமான துர்ரானி, சிறுமிகள் உரிமையுடன் கூடிய கல்வியில் புதுமையை ஏற்படுத்துவதில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர். LEARN அமைப்பு காந்தஹாரில் பள்ளிகளை அமைத்திருப்பதுடன் ஆசிரியப் பயிற்சியும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

    Rumie என்ற செயலி மூலமாக கல்விக்கான தகவல்கள், வீடியோக்கள், கல்வி விளையாட்டுகள் போன்றவற்றைப் பெற இந்த அமைப்பு உதவுகிறது. கிராமப்புற பெண்களுக்கு செவிலித்தாய் பயிற்சியையும் இந்த அமைப்பு அளிக்கிறது.

    ஐநா.வுக்கான ஆப்கானிஸ்தானின் இளையோர் பிரதிநிதியாக இருக்கும் துர்ரானி, ஆப்கானிய சிறுமிகளுக்கு கல்வி கற்றும் வசதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்காக மலாலா நிதிய கல்வி சாம்பியன் விருதைப் பெற்றிருக்கிறார்.

    *நாம் நாமா இருப்பதற்காக உலகம் நம்மை எவ்வளவு தாழ்த்த முயற்சிக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு வலி, அச்சம், காயம் ஏற்பட்டால், நாம் கைவிடுவதில்லை - சாலை எவ்வளவு காலம் இருந்தாலும் சரி.

  • நஜிலா எல்மன்கஸ்

    பிரிட்டன் லிபிய வெளியுறவு அமைச்சர்

    லிபியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், இந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். ஒரு தூதாண்மை அதிகாரியும் வழக்கறிஞர் ஆவார். 2011-இல் லிபிய புரட்சியின்போது ஏற்படுத்தப்பட்ட இடைக்கால சபையின் அங்கமாக நஜிலா இருந்தார். உள்நாட்டு சமூக அமைப்புகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அமெரிக்காவின் அமைதி நிறுவனத்தில் லிபியாவின் பிரதிநிதியாக இருந்தார். உலக மதங்கள், தூதாண்மை, மோதல் தீர்வு மையத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவது மற்றும் சட்டப் பணிகளில் ஈடுபட்டார். நாட்டின் அரசியல் மோதல் காரணமாக அவர் ராஜிநாமா செய்ய அழுத்தம் தரப்பட்டது. அண்மையில் அவர் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    அவர் பெங்காஸி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் ஜார்ஜ் மசோன் பல்கலைக்கழகத்தில் மோதல் ஆய்வு மற்றும் தீர்வு தொடர்பாக முனைவர் பட்டமும் பெற்றார்.

    *உலகம் 2021 ஆம் ஆண்டில் பெரிதும் பரிணாம மாற்றம் கண்டிருக்கிறது. நமது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும், மனித குலத்துக்கு முழுமையான சேவையையும் தரும் வகையில் உலகம் மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  • ஷிலா என்சான்டஸ்ட்

    ஆப்கானிஸ்தான் ஆசிரியர்

    ஆப்கன் சிறுமிகள் மத்தியில் கல்வி உரிமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆசிரியரான ஷிலாவின் முதல்பணி. மத ஆய்வுகளில் பட்டம் பெற்ற அவர், பள்ளிகளில் கற்றுக் கொடுத்தார்.

    அரசியல் மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் பெண்களின் பங்கை ஊக்குவிப்பதில் தீவிரமாகச் ஈடுபட்டுள்ளார். கல்வி கற்கவும், வேலை செய்யவும் பெண்களுக்கு இருக்கும் உரிமை பற்றி ஆப்கன் ஊடகங்களில் பேசினார். பெண்கள் மீதான் அடக்குமுறையைக் கண்டிக்கும் விதமாக காபூலில் நடந்த போராட்டத்தில் சடலத்தை மறைக்கும் வெள்ளைத் துணி போன்ற ஆடையை அணிந்து பங்கேற்றார்.

    ஆசிரியராக இருப்பதுடன் பல்வேறு பெண்களின் சங்கங்களில் தீவிரமான உறுப்பினராகவும் இருக்கிறார்.

    *அரசியல், சமூக, பொருளாதாரச் விவகாரங்களில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். கல்வியைக் கற்க பெண்ணுக்கு உள்ள உரிமையை ஏற்க வேண்டும். பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான வன்முறையும் ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்பட வேண்டும்.

  • சயிடா எடிபாரி

    ஆப்கானிஸ்தான் நகை வடிவமைப்பாளர்

    தொழில்முனைவரான இவர், சர்வதேச அளவில் அறியப்பட்ட நகை வடிமைப்பாளராக உள்ளார்.

    வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள ஸ்மித்சோனியனில் அவருடைய நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தனது தாய்நாடான ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய வடிவமைப்புகளைக் கொண்டதாக அவருடைய நகைகள் இருக்கின்றன. மேலும், அவை உள்நாட்டில் கிடைக்கும் ரத்தினக் கற்களைக் கொண்டும் ஒப்பனை உருப்படிவங்களைக் கொண்டும் அவை தயாரிக்கப்படுகின்றன

    தனது ஒன்றாவது வயதில் அகதிகள் முகாமில் இருந்தபோது, செரிப்ரல் மெனிங்கிட்டிஸால் பாதிக்கப்பட்ட இவர் காது கேட்கும் திறனை இழந்தார். காது கேளாதோருக்கான பள்ளியில் படித்தார். அப்பள்ளியை நிறுவ அவரின் தந்தையே உதவியது குறிப்பிடத்தக்கது. அதன்பின், அவர் கலை மற்றும் கட்டிடக்கலைக்கான டர்க்கோய்ஸ் மவுண்டெயின் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, நகை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றார்.

    *பெண்களுக்கு வேலைவாய்ப்பில்லை. ஆண்கள் மட்டுமே வேலை செய்ய முடிகிறது. இப்போது காலம் மாறி விட்டது. ஆப்கானிஸ்தானின் சிறந்த எதிர்காலத்துக்கான என் நம்பிக்கை விரக்தியாக மாறிவிட்டது.

  • சஹர் ஃபெட்ராட்

    ஆப்கானிஸ்தான் பெண்ணிய செயற்பாட்டாளர்

    பாலின முன்முடிவு நிலைப்பாடுகளைச் சமாளிக்கும் வகையிலான பல போராட்டங்களுக்கு பின்னால் இருந்து இயங்கியவர் சஹர். தாலிபன்கள் முதலில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியபோது, ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இளம் அகதியாகக் குடியேறினார். 2006 இல் காபூலுக்குத் திரும்பினார். பதின்ம வயதிலேயே பெண்ணியச் செயல்பாடுகளைத் தொடங்கினார்.

    ஸ்ட்ரீட் ஹாரஸ்மன்ட், டோன்ட் ட்ரஸ்ட் மை சைலன்ஸ் போன்ற தனது படத் தயாரிப்பு, எழுத்து ஆகியவற்றின் கதைகூறலில் பெண்ணியக் கருத்துகளைச் சேர்த்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள யுனெஸ்கோவின் கல்விப் பிரிவு மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்புடன் இணைந்து பணியாற்றினார்.

    மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் தீவிர பாலின ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுப் துறையில் படித்து வருகிறார்.

    *பெண்கள் கல்வி பெறுவதற்கான அடிப்படை உரிமை- அது போராடிப் பெற வேண்டிய ஒன்றல்ல என்ற நிலை வரும் ஒரு நாள் வரும் என்று நம்புகிறேன். தாய்நாட்டின் மலைகளைவிடவும் உயர்ந்த கனவுகளுக்காக ஆப்கானிஸ்தான் பெண்கள் போராடுவதை நான் பார்க்கப் போகிறேன் என நம்புகிறேன்.

  • மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ்

    அமெரிக்கா கொடையாளர், தொழிலதிபர்

    கொடையாளர், தொழிலதிபர் மற்றும் பெண்களுக்காகவும் சிறுமிகளுக்காகவும் வாதிடுபவர். உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களுள் ஒன்றின் திசையையும் முன்னுரிமைகளையும் அமைத்தவர் மெலிண்டா கேட்ஸ்.

    பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் சமூக முன்னேற்றத்தை தரும் நோக்கில் இயங்கும் ஒரு முதலீட்டு நிறுவனமான Pivotal Ventures-ஐ நிறுவியவர். The Moment of Lift என்ற புத்தகத்தை எழுதியவர்.

    மெலிண்டா கேட்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர். டியூக் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். தொண்டுப் பணிகளையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக, ஒரு தசாப்தமாக அந்த நிறுவனத்தின் மல்டிமீடியா தயாரிப்புகளை மேம்படுத்தினார்.

    *உலகம் முழுவதும் ஆழமாக ஊடுருவியிருக்கும் ஏற்றத்தாழ்வை கோவிட்-19 அம்பலப்படுத்தியிருக்கிறது. நமது மீட்பு நடவடிக்கைகள், சிறுமிகளையும் பெண்களையும் மையப்படுத்தி அவர்களது இப்போதைய துன்பத்தை ஒழிப்பதுடன் அவர்களுக்கு வருங்காலத்துக்கான ஓர் அடித்தளத்தையும் அமைக்க வேண்டும்

  • ஃபாத்திமா கைலானி

    2020-ஆம் ஆண்டு தாலிபன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமர்ந்து நியாயமான அரசியல் தீர்வைப் பெற முயற்சி செய்த நான்கு பெண்களில் இவரும் ஒருவர். முக்கியமான அரசியல் தலைவர், செயற்பாட்டாளர். கடந்த 43 ஆண்டுகளாக மனிதநேயப் பணிகளிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    1980-களில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான பெண் முகங்களில் ஒருவராகத் திகந்த ஃபாத்திமா, லண்டனில் இருந்தபடி முஜாஹிதீன்களின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். 2001-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பி, புதிய அரசியல் சட்டத்தை எழுத உதவினார்.

    ஆப்கன் செம்பிறைச் சங்கத்தின் தலைவராக 2005 முதல் 2016-வரை இருந்தார். அதன் குழுவில் இன்னும் இடம்பெற்றிருக்கிறார்.

    *தேசத்தை கட்டியெழுப்பும் வகையில் அர்த்தமுள்ள தேசிய பேச்சுவார்த்தையை நான் எதிர்பார்க்கிறேன்.

  • கரோலினா கார்சியா

    அர்ஜென்டினா இயக்குநர் - நெட்பிளிக்ஸ்

    ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தொடரின் இயக்குநரான கரோலினா கார்சியா அர்ஜென்டினாவில் பிறந்து கலிபோர்னியாவில் வளர்ந்தவர். பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் பாடகியும்கூ. ட்வென்டீத் செஞ்சுரி ஃபாக்ஸில் பயிற்சிபெற்ற பிறகு பொழுதுபோக்குத் துறையில் முன்னேறினார்.

    படைப்பாக்க நிர்வாகியாக ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், தி சில்லிங் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் சப்ரினா, 13 ரீசன்ஸ் ஒய், ஏடிப்பிக்கல், ரைசிங் டியான் உள்ளிட்ட பல்வேறு வெற்றிகரமான தொடர்களை தயாரித்தார்.

    ஹாலிவுட்டில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சில லத்தீன் இன மக்களில் ஒருவராக, கார்சியா லத்தீன் மக்களின் திரைப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் அவர்களின் கதைகளை முன்னிலைப்படுத்தவும் பணியாற்றுகிறார். ஏனெனில் லத்தீன் இனம் இப்போது அமெரிக்க மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

    *கடந்த சில ஆண்டுகள் நம் அனைவரையும் உலுக்கிவிட்டன. ஆனால் வாழ்க்கை குறுகியது - ஏன் நம் பொன்னான நேரத்தை அச்சத்திலேயே கழிக்க வேண்டும்? என் பாட்டி சொல்வது போல "வாழ்க்கையை வாழ வேண்டும்". நாம் எனது பாட்டியின் பேச்சைக் கேட்க வேண்டிய நேரம் இது.

  • சாகி காஹ்ரிமன்

    ஈரான் கவிஞர்

    ஈரானிய - கனடிய எழுத்தாளர். ஈரானிய விசித்திர அமைப்பின் இணை நிறுவனர்.

    டொரண்டோவை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, ஈரானில் வசிக்கும் அல்லது வெளியேற்றப்பட்ட ஆண் ஒருபாலுறவு, லெஸ்பியன், பைசெக்ஸுவல் நபர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றுகிறது.

    2010 ல் கில்கமிஷான் புத்தகங்கள் என்ற அமைப்பை நிறுவினார். இது ஈரானிய "தனித்துவ இலக்கியம்" மீது கவனம் செலுத்தியது. சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஆசிரியர், நான்கு தொகுதி கவிதைகளையும் எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியவர். அவரது படைப்புகள், விதிமுறைகளுக்கு, குறிப்பாக பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு தொடர்பானவற்றுக்கு சவால் விடுப்பவையாக அறியப்படுகின்றன.

    *உலகம் மீட்டமைக்கப்படும்போது, அது நம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். "நாங்கள்" என்பது LGBTQIA+ உள்ளடக்கிய அனைவரையும் கொண்டதாக மீட்டமைக்கப்படும்போதுதான் உலகம் கோவிட் இல்லாததாக மாறும்.

  • கவ்கா

    ஆப்கானிஸ்தான் இசைக்கலைஞர்

    திறமைவாய்ந்த பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசைக்கலைஞர். 5 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் பணியாற்றியுள்ளார். இவரது பெரும்பான்மையான பாடல்கள் ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் குறித்து அமைந்துள்ளன. அதன்மூலம், அவருக்கு விசுவாசமிக்க ரசிகர் பட்டாளம் உள்ளது. அவருடைய பாடல் வரிகள் சமகால சூழல் குறித்துப் போராடும் தன்மையுடன் உள்ளன.

    2019-ம் ஆண்டில் ‘தாலிபான்களுக்கு மத்தியில் நான் உன்னை முத்தமிடுகிறேன்’ (‘I kiss you amid the Taliban’) என்ற ரமின் மசார் கவிதைக்கு இவர் இசையமைத்தார். இப்பாடல் உடனடியாக இணையதளங்களில் வைரலானது. தபசும் என்கிற அவருடைய சமீபத்திய பாடல், போரால் கனவுகள் கலைக்கப்பட்ட குழந்தைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

    ”என் நாட்டில் நடைபெறும் முடிவுறா போர், நான் அமைதியை நாட அனுமதிக்கவில்லை என்பதால் நான் பாடல்கள் எழுதுகிறேன்” என்கிறார். இந்த துன்பத்தை அவரின் பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன.

    *எந்தளவுக்கு ஏவுகனைகள் இருக்கின்றனவோ, அதே அளவு என் தாய்நாட்டின் வானம் பல வண்ணமயமான பட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான் என்னுடைய மக்கள் குறித்து, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்கிறேன். அவர்களுடைய பாதுகாப்பு குறித்த பயம் தான் என்னுடைய நிலையான துணை.

  • ஏஞ்சலா காயூர்

    ஆப்கானிஸ்தான் ஆசிரியர், இணையவழிப் பள்ளி நிறுவனர்

    கல்வியாளரான் ஏஞ்சலா கயோர் நிறுவிய ஹெராட் இணையவழிப் பள்ளியில் சுமார் 1,000 மாணவர்கள் பயில்கிறார்கள். 400க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். சிறுமிகளும் இளம் பெண்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தாலிபன்கள் உத்தரவிட்டபோது, அதைச் சமாளிக்க ஏஞ்சலா முடிவெடுத்தார். டெலிகிராம், ஸ்கைப் மூலமாக அவரது இணையவழிப் பள்ளி இப்போது கணிதம், இசை முதல் சமையல் மற்றும் ஓவியம் வரை 170-க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்துகிறது.

    1992 இல் உள்நாட்டுப் போர் வெடித்தபோது கயூர் ஹெராட்டில் இருந்து ஈரானுக்குத் தப்பிச் சென்றார். தற்காலிக விசா மட்டுமே இருந்ததால், ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை.

    பின்னர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகத் தகுதி பெற்றார். பல முறை புலம்பெயர்ந்து இப்போது பிரிட்டனில் குடியேறியுள்ளார்.

    *தீங்கின் அவசியத்தை நான் அங்கீகரிக்க மாட்டேன்: தீங்கின் வட்டத்தை உலகம் தடுக்கும்போது நிரந்தர மகிழ்ச்சி உணரப்படும். அதனால் தாலிபன் அல்லது வேறு எந்த தீங்கையும் அங்கீகரிக்கவில்லை.

  • ஜமீலா கார்டன்

    சோமாலியா தலைமை நிர்வாக அதிகாரி - லுமாசெய்ன்

    செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் ஒரு சிந்தனை முன்னோடியான ஜமீலா கார்டன், உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலிகளில் உடைந்த இணைப்புகளை இணைக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் உலகின் முதல் தளமான லுமாசெய்ன் என்ற தளத்தின் நிறுவனர்.

    அவர் சோமாலிய கிராமத்தில் பிறந்தவர். உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிப்பதற்காக பதின்ம பருவத்தில் கென்யாவுக்கு இடம்பெயர்ந்தார். பின்னர் அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது தொழில்நுட்பத்தின் மீது காதல் கொண்டார். லுமாசெய்னை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஐபிஎம் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாகியாகவும், குவாண்டாஸ் குழுமத்தின் தலைமை தகவல் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

    அவர் 2018 இன் சர்வதேச மகளிர் தொழில்முனைவோர் போட்டியில் மைக்ரோசாப்டின் உலகளாவிய விருது பெற்றவர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் 2021 ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் என்று பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவு விருது பெற்றார்.

    *பின்தங்கிய பின்னணியில் உள்ளவர்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் பெறுவதை சாத்தியமாக்குவதில் செயற்கை நுண்ணறிவுக்கு ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். அதே நேரத்தில் வணிகங்களை மாற்றுவதற்கும் உதவுகிறேன்.

  • நஜிலா ஹபிப்யார்

    ஆப்கானிஸ்தான் தொழில்முனைவர்

    ஆப்கான் பெண்கள் நெசவு தொழிலை மேற்கொள்ளவும், அவர்கள் உற்பத்தி செய்ததை செலவுகரமான இடைத்தரகர்கள் இன்றி, வெளிநாடுகளில் விற்பனை செய்யவும் உதவி செய்வதற்கான ப்ளூ ட்ரெஷர் இன்க் மற்றும் ஆர்க் க்ரூப் ( Blue Treasure Inc and Ark Group) எனப்படும் நிறுவனத்தை நஜிலா தொடங்கினார். சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மற்றும் உலக வங்கிகளின் சார்பில், பெண்கள் முன்னேற்றம் மற்றும் தொழில்கள் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தத் திட்டங்களை வழிநடத்தியுள்ளார்.

    2012 மற்றும் 2015-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், உலகளவில் ஆப்கானிய ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், அரசாங்கத்தின் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவனத்தில் தலைமை செயல் நிர்வாகியாக பணியாற்றினார்.

    பெண் கல்வியை ஊக்குவிக்க லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். மேலும், வீடற்ற குடும்பங்களுக்கான அமைப்பு ஒன்றையும் நிறுவினார்.

    *ஆப்கான் பெண்ணாக நான் பல துன்பங்களை எதிர்கொண்டாலும், வருங்கால தலைமுறைக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பங்காற்ற முடியும் என நான் நம்புகிறேன்.

  • லைலா ஹைதாரி

    பாகிஸ்தான் ’மதர் கேம்ப்’ அமைப்பின் நிறுவனர்

    போதைப்பொருட்கள் உபயோகிப்பவர்கள் குறித்து பொது வெளியில் நிலவும் கருத்துக்களைக் கடந்து, ‘மதர் கேம்ப்’ என்ற பெயரில், காபூலில் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார். 2010-ம் ஆண்டிலிருந்து சுமார் 6,400 பேருக்கு இதன்மூலம் உதவி கிடைத்துள்ளது. இந்த மையத்தை அமைக்க தன்னுடைய சொந்த சேமிப்பையே பயன்படுத்தினார். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வருவோர் நடத்தும் ஒரு உணவகத்தை அமைத்து, அதிலிருந்து வரும் பணத்தின் மூலம் இந்த அமைப்பை நடத்தி வந்தார். ஆனால், காபூலில் அரசு வீழ்ந்த பிறகு இதனை மூடவேண்டியதாகிவிட்டது.

    இவருடைய குடும்பம் பாம்யனை சேர்ந்தது. ஆனால், இவர் பாகிஸ்தானில் அகதியாக பிறந்தவர். 12 வயதில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட இவர், பெண்களின் உரிமைகள் குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார்.

    ’லைலா அட் தி பிரிட்ஜ்’ (Laila at the Bridge) (2018) எனப்படும் பிரபலமான ஆவணப்படத்தில் இவர் ஆவணப்படுத்தப்பட்டுள்ளார். அதில், அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்பை மீறி தன்னுடைய மறுவாழ்வு மையத்தைத் தொடர்ந்து நடத்துவது குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

    *இன்னும் விழிப்புணர்வு பரவும் என நம்புகிறேன். அதன்மூலம், இன்னும் தார்மீகமான, மனிதாபிமான உலகமாக மாறும். அமெரிக்கக் குடிமகனின் ஒரு வாக்கு, ஆப்கானியரின் தலைவிதியை அடிப்படையில் மாற்றக்கூடிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம்.

  • சர்லாஷ்ட் ஹலாய்ம்சாய்

    ஆப்கானிஸ்தான் அகதிகள் புற அதிர்ச்சித் தடுப்பு முயற்சி அமைப்பின் (Refugee Trauma Initiative) தலைமைச் செயல் அதிகாரி

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் அகதியான இவர், அகதிகள் புற அதிர்ச்சித் தடுப்பு முயற்சி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஆவார். இந்த அமைப்பு அகதிகளுக்கு மனரீதியான பலத்தை அளிக்கிறது. மேலும், வன்முறை மற்றும் புலம்பெயர்தலால் ஏற்படும் உணர்வு ரீதியான இழப்பிலிருந்து மீள உதவுகிறது.

    இந்த அமைப்பைத் தொடங்குவதற்கு முன்னர், துருக்கி - சிரிய எல்லையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் கல்வி கற்கவும், அகதிகளுக்கான கல்வி மற்றும் நலன் சார்ந்து அரசு சாரா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டார்.

    குடிமை கண்டுபிடிப்புகளுக்காக 2018-ம் ஆண்டில் அறிமுகமான ஒபாமா அறக்கட்டளை கூட்டாய்வுக்கான 20 உலக தலைவர்களில் இவரும் ஒருவர். இது, அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் பெயரால் வழங்கப்பட்டது.

    *ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையை பிளக்கும் வன்முறை சுழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே வருங்காலத்துக்கான என் நம்பிக்கை.

  • ஷாம்ஸியா ஹஸானி

    ஈரான் வீதி ஓவியர்

    சண்டைகள் மூலம் அழிக்கப்பட்ட ஒரு நகரத்திற்கு வண்ணத்தை கொண்டு வரும் ஷாம்ஸியா ஹஸானி ஆப்கானிஸ்தானின் முதல் பெண் கிராஃபிட்டி மற்றும் வீதி ஓவியர். காபூலின் கைவிடப்பட்ட, சேதமடைந்த கட்டடங்களை பெண்களை நம்பிக்கையான, சக்திவாய்ந்த வகையில் சுவரோவியங்களாகத் தீட்டப் பயன்படுத்துகிறார்.

    ஈரானில் ஆப்கானிய பெற்றோருக்கு பிறந்த ஹசானி, காபூலில் விஷுவல் ஆர்ட்ஸ் படித்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் கற்பித்த அவர் 15 நாடுகளில் சுவரோவியங்களை உருவாக்கியுள்ளார். அவர் Foreing Policy இதழின் சிறந்த 100 சிந்தனையாளர்கள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் கிளர்ச்சி பெண்களுக்கு சிறந்த விற்பனையான நல்ல நைட் ஸ்டோரிகளில் 2 அம்சங்கள், செல்பேசிங் பெண்களின் சுயவிவரங்களின் தொகுப்பு. Goodnight Stories for Rebel Girls 2 என்ற நூலிலும் இடம்பிடித்துள்ளார்.

    தாலிபன் ஆட்சிக்கு வந்தபோதிலும், தனது ஓவியங்களை சமூக ஊடகங்கள் மூலமாக பதிவிடுகிறார்.

    *கடந்த 15 ஆண்டுகளில், என் நாடு பற்றி நான் நம்பிக்கையுடன் இருந்த போதெல்லாம், நிலைமை எப்போதும் மோசமாக மாறிவிட்டிருக்கின்றன. ஒரு பிரகாசமான ஆப்கானிஸ்தான் என்பது பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை - நம்பிக்கையற்றுப் போவதைவிட நம்பாமல் இருப்பதே மேல்.

  • நஸ்ரின் ஹுசைனி

    75 மாணாக்கர்களின் இரண்டே பெண்களை மட்டுமே கொண்ட காபூல் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ வகுப்பில் நஸ்ரின் ஹுசைனியும் ஒருவர். அவர் ஈரானில் அகதியாக வளர்ந்தார். படிப்புக்காக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பி, பின்னர் உதவித் தொகையுடன் கனடாவின் குயெல்ப் பல்கலைக்கழகத்தில் விலங்கு நலம் பற்றிப் படித்தார்.

    ஹுசைனி இப்போது கனடாவில் நோயெதிர்ப்பு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். கிடைக்கும் நேரத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹசாரா மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு கனடாவில் மீள்குடியேற உதவும் கனடா ஹசாரா மனிதநேயச் சேவைகள் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார்.

    ஆப்கானிய குழந்தைகளிடையே வாசிப்பு மற்றும் கதைசொல்லும் வழக்கத்தை ஊக்குவிக்கும் இளைஞர் திட்டமான புக்கீஸுடன் இணைந்து பணிபுரிகிறார்.

    *ஆப்கானிஸ்தான் பெண்களும் சிறுமிகளும் அஞ்சுகிறார்கள். நிலைமை நம்பிக்கையற்றுக் காணப்படுகிறது. இருப்பினும் எப்போதும் ஒரு வழி உண்டு. பாப் மார்லி கூறுவது போல "வலிமையாக இருப்பது உங்கள் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு என்ற நிலை ஏற்படும் வரை நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று உங்களுக்குத் தெரியாது."

  • மொமேனா இப்ராஹிமி

    ஆப்கானிஸ்தான் பெண் காவலர்

    மொமேனா கர்பாலயீ என்ற அறியப்படும் மொமேனா இப்ராஹிமி காவல்துறையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் தனது மூத்த அதிகாரியால் பாலியல் கொடுமைக்கு ஆளானார். தனக்கு நேர்ந்ததைப் பற்றியும் ஆப்கானிஸ்தான் காவல்துறையில் நடக்கும் பிற வன்கொடுமை புகார்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசுவதற்கு முடிவு செய்தார்.

    அதன் பிறகு அச்சுறுத்தல்கள் வந்த போதிலும், பாலியல் வன்கொடுமை, பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காகப் போராடுகிறார். "யாராவது ஒருவர் முன்வந்து பேச வேண்டும். உயிரைப் பணயம் வைத்தாலும், அது நானாக இருக்கலாம் என்று நினைத்தேன்." என பிபிசியிடம் அவர் கூறினார்.

    தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பிரிட்னுக்கு மீட்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான ஆப்கானிய பெண்களில் இப்ராஹிமியும் ஒருவர்.

    *சுயமாகவே படித்து முன்னேறி வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் நிலை வர வேண்டும், மக்களுக்கு எதிராக தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தியோரிடம் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • முக்தா கல்ரா

    இந்தியா நாட் தட் டிஃப்பரென்ட் - இணை நிறுவனர்

    ஆட்டிஸம்-உரிமைகள் ஆர்வலர். ஆட்டிஸம் கொண்ட 12 வயது குழந்தையின் தாய். குழந்தை தலைமையிலான நாட் தட் டிப்பரன்ட் என்ற அனைவரையும் உள்ளடக்கும், "நரம்பியல் பன்முகத்தன்மை" பற்றிய புரிதலை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் இயக்கத்தை இணைந்து நிறுவினார் முக்தா கர்லா. குழந்தைகள் ஆட்டிஸம் பற்றிய புரிதலை பெறவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை நண்பர்களாக்கிக் கொள்ளவும் பயன்படும் வகையிலான காமிக் கதையை தயாரித்ததிலும் பங்கு வகித்தவர்.

    தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆவணப் பட எழுத்தாளர், பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மைக்கான பயிற்சியாளர் என இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் கர்லா.

    பேக்ஸ்டேஸ் என்ற பாட்காஸ்டிங் செயலியின் தலைமை உள்ளடக்க தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

    *பெருந்தொற்று ஏழு பில்லியன் மக்களை ஒரு பொது உண்மைநிலையின்படி வாழவைத்திருக்கிறது. தங்கள் உலகங்களில் தனியாக வாழ்ந்தாலும், துன்பங்களால் ஒருவருக்கொருவர் கட்டப்பட்டுள்ளனர். இந்தப் பொது அனுபவம் சக மனிதர்களை நோக்கிய பெருங்கருணையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • ஃப்ரெஷ்டா கரிம்

    ஆப்கானிஸ்தான் சார்மக்ஸ் நடமாடும் நூலகத்தின் நிறுவனர்

    குழந்தைகளிடையே வாசிப்பு மற்றும் கலை தொடர்பான ஆர்வத்தை ஊக்குவிக்க, காபூலில் இயங்கும் அரசு சாரா நிறுவனம் சார்மக்ஸ், பேருந்துகளை நடமாடும் நூலகங்களாக மாற்றி, பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளது.

    குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் ஃப்ரெஷ்டா கரிம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொது கொள்கை பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற பின், 2018-ம் ஆண்டில் சார்மக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

    தன் 12-வது வயதில் குழந்தைகள் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் உரிமைகளின் உண்மைநிலை தொடர்பான அறிக்கைகளை வழங்கினார். அப்போதிலிருந்து இது தொடர்பான களப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்.

    *ஆப்கானிஸ்தானில் அடக்குமுறை மற்றும் வன்முறை சுழற்சிகளை உடைத்தெறிபவர்களாக நான் குழந்தைகளை பார்க்கிறேன். எனவேதான் நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். புதிய பார்வைகள், புதிய அரசியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலுக்கான தளத்தை உருவாக்குகிறேன்.

  • அமீனா கரீம்யான்

    கட்டுமானப் பொறியாளரான அமீனா, ஹெராத் தொழில்நுட்பப் பயிலகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆப்கானிஸ்தானில் வானியல் மேம்பாட்டில் கவனம் செலுத்திய முதல் பெண்களில் ஒருவர்.

    2018 இல் அவர் தொடங்கிய கயானா வானியல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். இது இளைஞர்கள் மத்தியில் வானியல் அறிவை ஊக்குவிக்கிறது.

    முற்றிலும் பெண்களைக் கொண்ட அவரது கயானா வானியல் குழுமம் ஜூலை 2021 இல், போலந்தில் 50 நாடுகளுக்கும் மேற்பட்ட 255 அணிகள் பங்கேற்ற சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தது.

    *தாலிபன்கள் பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை மறுப்பதால், நாம் முன்னெப்போதையும் விட அதிகமாக இணைந்திருக்க வேண்டும் - கயானா வானியல் குழு ஒவ்வோர் இரவிலும் ஆன்லைனில் சந்திக்கிறது. எனது தாய்நாட்டின் இளம் சமூகத்துக்கு பாதையமைத்துத் தருவதே எனது ஒரே நம்பிக்கை.

  • அலியா காஸிமி

    ஆப்கானிஸ்தான் கல்வியாளர்

    தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றுவதற்கு முன்பு, மனித உரிமைகள் மற்றும் கல்வி தொடர்பான பணிகளுக்காக தனது நேரத்தை அலியா கஜிமி அர்ப்பணித்தார். மூன்று ஆண்டுகள் ஒரு தன்னார்வலராக செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றினார். பெண்களுக்கான மிட்டாய் மற்றும் பேக்கரி தொழிலைத் தொடங்கினார். 2020-இல் வணிக மேலாண்மையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்த அவர் ஒரு விரிவுரையாளராக பணியாற்ற விரும்பினார்.

    2021-இல் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்காவுக்குச் சென்ற அவர், இப்போது முனைவர் பட்டத்துக்காக படிக்கத் திட்டமிட்டுள்ளார்.

    பிபிசிக்கு அவர் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் பெண்களின் விருப்பத்துக்கான சுதந்திரம், குறிப்பாக ஆடையைத் தேர்வு பற்றி அவர் மிகவும் வேட்கையுடன் கூறியிருக்கிறார்.

    *அமைதிதான் ஆப்கானிஸ்தானுக்கான எனது ஒரே நம்பிக்கை. அமைதியே எங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று.

  • பரோனெஸ் ஹெலினா கென்னெடி க்யூசி

    பிரிட்டன் இயக்குநர் - சர்வதேச வழக்கறிஞர் சங்கத்தின் மனித உரிமைகள் அமைப்பு

    பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்புக்காக அறியப்படும் ஒரு வழக்கறிஞரான ஹெலினா 40 ஆண்டுகளாக குற்றவியல் சட்டங்களில் பணியாற்றுகிறார். சர்வதேச வழக்கறிஞர் சங்க மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் அவர். ஆப்கானிஸ்தானில் அபாய நிலையில் இருக்கும் பெண்களுக்கு சமீபகாலமாக உதவி செய்து வருகிறார்.

    பல ஆண்டுகளாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மேன்சஃபீல்ட் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அங்கு மனித உரிமைகளுக்கான பொனோவேரா பயிலகத்தை நிறுவினார்.

    பரோனெஸ் கென்னெடி நீதி அமைப்பின் பெண்கள் மீதான தாக்கம் பற்றிய பல்வேறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். 1997-இல் பிரிட்டன் நாடாளுமன்ற பிரபுக்கள் அவையில் தொழிலாளர் கட்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

    *நமகு வழக்குகளுக்காக வாதிடும் வழக்கறிஞர்களும், பெண்களும் ஆண்களுமாகிய சுயாதீன நீதிபதிகளும் இல்லாதவரை நமது மனித உரிமைகளுக்கு அர்த்தமில்லை.

  • ஹோதா காமோஷ்

    ஈரான் மாதவிடாய் செயற்பாட்டாளர்

    "மாதவிடாய் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல" என்ற விழிப்புணர்வு பரப்புரையை ஹோதா காமோஷ் ஆப்கானிஸ்தான் பள்ளிகள் நடத்தினார். இது பள்ளிகளில் மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை ஊக்குவித்தது.

    புலம் பெயர்ந்த ஆப்கானிய பெற்றோர்களுக்கு ஈரானில் பிறந்த ஹோதா, குழந்தையாக இருக்கும்போது ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினார். பழமைவாதப் பழங்கங்களைக் கொண்ட உறவினர்களின் கருத்துகளை எதிர்த்து கல்வி பயில அவரது தாய் ஆதரவளித்தார். ஒரு கவிஞர், பத்திரிகையாளருமான காமோஷ் 2015-ஆம் ஆண்டில் வானொலித் தொகுப்பாளரானார். பெண்களுக்கான எதிரான அநீதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தனது கிராமத்தில் பெண்களுக்கான படிப்பறிவுத் திட்டத்தைத் தொடங்கினார்.

    தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிகளில் அனுமதிக்கப்படாத 7-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் பெண்களுக்கு கல்வி வகுப்புகளை நடத்துகிறார்.

    *2021-ஆம் ஆண்டும் முற்றாக இருளைக் கொண்டிருந்த போதிலும், தங்களது உரிமைகளை யார் பறித்தார்களோ, அவர்களிடமிருந்தே அதே மீட்பதற்காக பிரம்புகளையும் தோட்டாக்களையும் பெண்கள் எதிர்கொண்டிருக்கும் ஆண்டு இது.இந்த ஆண்டு நம்பிக்கையின் ஆண்டு என்று நான் பெயரிடுகிறேன்.

  • மியா கிறிஸ்னா பிராதிவி

    இந்தோனீசியா சூழல் ஆர்வலர்

    லாப நோக்கற்ற கிரியா லுஹு என்ற அமைப்பின் மூலமாக பாலி தீவில் பிளாஸ்டிக் கழிவு நெருக்கடியை தீர்க்க இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பணிபுரிகிறார். உள்ளூர் சமூகத்துடன் இணைந்து, அவரது அமைப்பு மேம்பட்ட முறையில் கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் செயலாக்குதல், தரவுகளைச் சேகரித்து கழிவு மேலாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக "டிஜிட்டல் கழிவு வங்கி" என்று செயலியை உருவாக்கியிருக்கிறது.

    Institut teknologi bandung- இல் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்ற மியா கிறிஸ்னா ஒரு உள்ளூர் கழிவு மையத்தில் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் செயல்பாட்டு மேலாளராக பணியாற்றுகிறார்.

    இந்தோனீசியாவின் டென்பாசார் நகர சுற்றுச்சூழல் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் ஆய்வாளராகவும் இருக்கிறார்.

    *Tri Hita Karana என்ற பாலினீசிய தத்துவத்தின் உந்துதலில், நமது தாய் பூமியின் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் மீண்டும் கொண்டுவருவோம். நாம்தான் மாசுபாட்டு பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம், ஆனால் நாமே அதற்குத் தீர்வாகவும் இருக்கலாம்.

  • ஹைடி ஜே. லேர்சன்

    அமெரிக்கா இயக்குநர் - தடுப்பூசி நம்பிக்கைத் திட்டம்

    லண்டன் சுகாதார மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி நம்பகத் திட்ட இயக்குநர் மற்றும் மானுடவியலாளர் ஹைடி ஜே.லார்சன். சுகாதாரம் மீது சமூகம் மற்றும் அரசியல் காரணிகள் செலுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் ஹைடி, தற்போது தடுப்பூசிகள் குறித்த வதந்திகள் மற்றும் அதன் ஆபத்துகளை கண்காணித்து, தடுப்பூசிகள் மீது பொது நம்பகத்தன்மையை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன, ஏன் அவை இன்னும் தொடர்கின்றன என்பது தொடர்பாக, STUCK: How Vaccine Rumors Start – and Why They Don’t Go Away என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். மேலும், இவர் கர்ப்ப காலத்தில் தடுப்பூசியை ஏற்றுக்கொள்வது குறித்த உலகளாவிய ஆய்வின் முதன்மை ஆய்வாளரும் ஆவார்.

    தவறான தகவல்கள் குறித்த அவருடைய அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்காக 2021-ம் ஆண்டுக்கான எடின்பர் பதக்கம் லார்சனுக்கு வழங்கப்பட்டது.

    *ஏற்கெனவே பிரிந்து கிடக்கும் உலகில் பெருந்தொற்று ஏற்பட்டது. நம்மைப் பிரிக்கும் ஆழமான பிரச்சினைகளிலிருந்து எந்தத் தடுப்பூசியும் நம்மைக் காப்பாற்றாது; தனிநபராக, சமூகமாக, சிறிய மற்றும் பெரிய தலைவர்களாக நம்முடைய செயல்பாடுகள் மட்டுமே உலகை மீட்டெடுக்க உதவும்.

  • இமான் லே காய்ரே

    எகிப்து நிறுவனர் - ட்ரான்ஸ் அசிலியாஸ்

    கெய்ரோ ஆபரா ஹவுஸில் இவர் ஒரு சமகால நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர். LGBTQ+ நபர் என்பதால் குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட்டதால் அவர் எகிப்தில் இருந்து தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. 2008-ஆம் ஆண்டில் அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அடைக்கலம் அளிக்கப்பட்ட அவர், நியூயார்க்கில் கலைஞர், நடனக் கலைஞர், நடிகை, மற்ற்றும் LGBTQ+ ஆர்வலராக இருக்கிறார்.

    பாதுகாப்பான நாடுகளுக்கு குடிபெயர திருநங்கைகளுக்கு உதவும் TransEmigrate என்ற ஐரோப்பிய அமைப்பில் அரேபிய உறவுகள் மேலாளராகப் பணியாற்றுகிறார்.

    மார்ச் 2021-ல், அவர் தனது சொந்த அறக்கட்டளையான ட்ரான்ஸ் அசிலியாஸை தொடங்கினார். திருநங்கைகளுக்கு உகந்த பிராந்தியங்களுக்கு குடிபெயர விரும்பும் திருநங்கைகளுக்கு உதவுவதையும் அவர்களுக்கு உணர்வுப்பூர்வ ஆதரவை வழங்குவதையும் இந்த அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டது.

    *ஏற்கனவே பூமியில் மிகவும் அபாயம் நிறைந்த திருநங்கைகளை கோவிட் பெருந்தொற்று மேலும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது. சில நேரங்களில் கொடுமைப்படுத்தும் குடும்பங்களுடன் தங்கியிருக்க நிர்பந்திக்கிறது. உலகமே முடங்கிய நிலையில், அவர்களது கூக்குரல் வேதனையளிக்கிறது. இப்போது உலகம் அவர்களை பாதுகாக்கவும் குணப்படுத்தவும் வேண்டும்.

  • செவிட்செம் எர்னெஸ்டைன் லெய்கேகி

    கேமரூன் காலநிலை செயற்பாட்டாளர்

    செவிட்செம் எர்னெஸ்டைன் லெய்கேகி நிறுவிய அமைப்பு ஒன்று, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தேனீ வளர்ப்பை ஒரு உத்தியாகப் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பின் மூலம், 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குத் தேன் உற்பத்தி, தரக்கட்டுப்பாடு, மெழுகிலிருந்து தேனைப் பிரிப்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காடுகள் அழிப்பைத் தடுக்க, தேனீக்களுக்கு ஏதுவான 86,000-க்கும் அதிகமான மரங்களையும் அந்த அமைப்பினர் நட்டுள்ளனர்.

    கேமரூன் பாலின மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் (CAMGEW) நிறுவன உறுப்பினர் லெய்கேகி. இந்த அமைப்பு சூழலியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பாலின ரீதியான பார்வையுடன் அணுகுகிறது. காலநிலை செயற்பாட்டாளராக, அவருடைய பணிகள் பெரும்பாலும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் இயற்கை வள மேலாண்மையுடன் தொடர்புடையதாக உள்ளது.

    சமூக ரீதியிலான முயற்சிகள் மூலம், கிலம் - இஜிம் போன்ற காடுகளை பாதுகாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

    *காடுகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார முன்முயற்சிகளில் பெண்களின் சூழலியல் மற்றும் சமூக - பொருளாதார உரிமைகளை கவனத்தில் கொள்ளும் உலகம் எனக்கு வேண்டும்.

  • எலிசா லான்கோன் அன்டிலியோ

    சிலி தலைவர்- அரசியல் சாசன மாநாடு

    2021-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பூர்வகுடிப் பிரதிநிதிகளில் ஒருவராக, சிலியின் புதிய அரசியல் சாசனத்தை எழுதுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார். மொழியியலாளர், ஆசிரியர் மற்றும் அறிவார்ந்தவரான எலிசா லான்கோன் அன்டிலியோ, சிலி பூர்வகுடிகள் தேசப் பிரதிநிதிகளாக முதல்முறையாகப் பங்கெடுக்கும் அரசியல் சாசன மாநாட்டிற்கு தலைமை வகித்து வழிநடத்துகிறார்.

    இவர், சிலி நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வாழக்கூடிய பூர்வகுடியினமான மபுஷேவைச் சேர்ந்தவர். அதோடு, “பன்மைதேசியமுள்ள நாடு (plurinational state)” என்பதன்கீழ் பூர்வகுடி மக்களின் உரிமை, மொழி மற்றும் மரபை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுப்பவர்.

    இன பாகுபாடுகளையும் வறுமையையும் சந்தித்து வளர்ந்திருந்தாலும், மனிதநேயத்தில் முனைவர் பட்டம் பெற்று, சான்டியாகோ பல்கலைக்கழ்கத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறார்

    *பெருந்தொற்றின்போது மரணத்தை அணுதினமும் அருகிலேயே பார்த்தபிறகு, மனிதர்கள் அனைவருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சம உரிமையை வழங்கவேண்டியது கட்டாயமாகிவிட்டது. நீர், காடு ஆகியவை முதல் தேனீ, எறும்பு என்று பூமித்தாயின் அனைத்து வழங்களையும் சார்ந்துதான் நம் வாழ்க்கை அமைந்துள்ளது.

  • க்ளோய் லோப்ஸ் கோம்ஸ்

    பிரான்ஸ் பாலே நடன கலைஞர்

    மதிப்புமிக்க ஸ்டாட்ஸ்பாலே பெர்லின் நடனக்குழுவில் கடந்த 2018-ம் ஆண்டு, முதல் கறுப்பின நடனக் கலைஞராக இணைந்தவர் க்ளோய் லோப்ஸ் கோம்ஸ். மாஸ்கோவில் உள்ள போல்ஷோய் அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், ஸ்டாட்ஸ்பாலே பெர்லின் நடனக்குழுவில் இன ரீதியான பாகுபாடுகளை சந்தித்துள்ளார். இத்தகைய பாகுபாடுகள், யாரும் அறியாதவையாகவும் மேல்தட்டு மனப்பான்மையுடனும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இத்தகைய குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் அவர் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, கறுப்பின மற்றும் பல்வேறு இன வேறுபாடுகளைக் கொண்டவர்கள் அவருக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

    ஸ்டாட்ஸ்பாலே பெர்லின் நடனக்குழுவில் அவருடைய ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு புதுப்பிக்கப்படாததைத் தொடர்ந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை லோப்ஸ் கோம்ஸ் எடுக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக, அந்நிறுவனம், இனரீதியான பாகுபாடுகள் தொடர்பாக தங்கள் நிறுவன ஊழியர்களிடம் உள்விசாராணை மேற்கொண்டது. பின், மன்னிப்புக் கோரிய அந்நிறுவனம், நடன கலைஞருக்கு நீதிமன்றத்திற்கு வெளியே இழப்பீட்டையும் வழங்கியது.

    *துரதிர்ஷ்டவசமாக நாம் அனைவரும் இந்த உலகில் சமமாக பிறக்கவில்லை. இனம் மற்றும் சமூக அந்தஸ்தை பொறுத்தே நாம் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் முழுத்திறனையும் அடைய வாய்ப்புள்ள உலகில் நான் வாழ விரும்புகிறேன்.

  • மஹேரா

    ஆப்கானிஸ்தான் மருத்துவர்

    டாக்டர் மஹேரா இன்னும் தான் பணிபுரியும் மகளிர் மருத்துவ மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு அவர் செல்ல வேண்டும். முன்களப் பராமரிப்பும், தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

    அவர் முன்பு பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றினார். தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் இந்தப் பணி நிறுத்தப்பட்டது.

    *இப்போது நம்பிக்கை குறைவாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானின் பெண்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லை. அவர்களால் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். பள்ளிகளில் பெண்கள் இனிமேல் செல்ல முடியாது என்பதுதான் என் முக்கிய கவலை.

  • மறால்

    ஆப்கானிஸ்தான் செயல்பாட்டாளர்

    மறாலின் குடும்பத்தினர் அவர் பெண்கள் உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் மக்கள் அமைப்புகளிலும் பங்கேற்பதையும் விரும்பவில்லை. ஒரு பெண் என்பதால் அவர் வெளியே பணிகளுக்குச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஆயினும் அவர் அதையே செய்தார்.

    2004-ஆம் ஆண்டில் இருந்து உள்ளூரில் பெண்களின் பங்கேற்புக்கு முயற்சித்து வருகிறார், அவர்களின் உரிமையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், வெளியில் சென்று பணியாற்றுவதற்கும், நிதிச் சுதந்திரம் பெறுவதற்கும் ஊக்குவித்து வருகிறார்.

    குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்களுக்காகவும் பணியாற்றும் அவர், அவர்களுக்குத் தங்குமிடம் கிடைப்பதை உறுதி செய்வதுடன் நீதி பெற்றுத் தரவும் உதவி செய்கிறார்.

    *எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நினைத்து நம்பிக்கையின்றி உணர்ந்தேன். ஆனால் நாங்கள் செய்ததை அனைத்தையும் நினைத்துப் பார்க்கும்போது, மீண்டும் பணிகளைத் தொடரும் துணிச்சல் பெற்றேன். ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் - அமைதியையும் மனிதநேயத்தையும் விரும்புவோருக்கு எதிர்காலம் சொந்தமானது.

  • மஸோமா

    ஆப்கானிஸ்தான் அரசு வழக்கறிஞர்

    ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் வழக்கறிஞராக, நீதித்துறை ஆவணச் சேகரிப்பு மற்றும் சட்ட வழக்குகளை வடிவமைக்கும் பணிகளைச் செய்தார் மஸோமா. ஒரு சட்டப் பட்டதாரியாக கடந்த இருபது ஆண்டுகளில் படித்த பல பெண்களில் ஒருவர். 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது மக்களுக்காக பணியாற்றியதற்காகப் பெருமை கொள்கிறார்.

    ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபோது, கடுமையான குற்றவாளிகள் மற்றும் இஸ்லாமியவாத போராளிகள் உள்பட ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்தனர். அரசு ஊழியர்களுக்கு தாலிபன்கள் பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்த போதிலும், சட்டவிரோதக் கொலைகள், கடத்தல்கள் நடந்ததாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

    வருங்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தற்போது மறைந்து வாழ்கிறார் மஸோமா.

    *உலக மக்கள் தொகையில் பெண்களும் சிறுமிகளையும் பாதி பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால், ஆண்களைப் போலவே அவர்களும் மக்களுக்குச் சேவையாற்ற முடியும்.

  • ஃபியாமே நயோமி மடாஃபா

    சமோவா பிரதமர்

    சமோவா நாட்டின் முதல் பெண் பிரதமர். ஃபட்டுவாட்டுவா ஐ லே அட்வா சமோவா உ டஸி (Faʻatuatua i le Atua Samoa ua Tasi) கட்சியின் தலைவர். தன் 27-வது வயதில் அரசியலில் நுழைந்தார். துணை பிரதமர், பெண்கள், சமூகம் மற்றும் சமூக வளர்ச்சித் துறை அமைச்சர், நீதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    மேலும், மதாய் எனப்படும் உயரிய தலைமை கௌரவமும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் பதவிகளுக்கு வரவிரும்பும் சமோவா பெண்களுக்கு இவர் உத்வேகம் அளிக்கிறார்.

    உலகிலேயே வெப்பமயமாதலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் ஒன்றான இந்நாட்டில், பருவநிலை நெருக்கடிக்கு எதிராக போராடுவது உள்ளிட்ட சூழலியல் பார்வை கொண்டதாக அவருடைய கோட்பாடு உள்ளது.

    *எங்கு நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு வருங்கால சந்ததியினருக்கான நம்பிக்கை இருக்கும்.

  • சலீமா மஸாரி

    ஈரான் அரசியல்வாதி, மாவட்ட முன்னாள் ஆளுநர்

    ஆப்கானிஸ்தானின் மூன்று பெண் மாவட்ட ஆளுநர்களில் சலீமா மஸாரியும் ஒருவர். தாலிபன்களை எதிர்த்துச் சண்டையிட்ட அரசு ஆதரவு ஆயுதக்குழுவின் துணிச்சலான தலைவர் என்ற முறையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

    ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புவதற்கு முன்னதாக ஓர் அகதியாக ஈரானில் பட்டம் படித்தார் சலீமா. 2018 ஆம் ஆண்டில் பால்க் மாகாணத்தில் உள்ள சார்ஜின்ட் மாவட்ட ஆளுநரானார். அங்கு அவர் 100 தலிபான்களை பேச்சுவார்த்தை நடத்தி சரணடைய வைத்தார். 2021-இல் தாலிபன்களுக்கு கணிசமான எதிர்ப்பை அளித்தது அவரது மாவட்டம். காபூல் வீழ்ச்சியடையடையும் வரை, தாலிபன்களின் வசமாகாத ஒரு சில மாவட்டங்களில் அவரது மாவட்டமும் ஒன்றாகும்.

    அவர் பிடிபட்டதாக முதலில் கருதப்பட்டார். ஆனால் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற அவர் மீள் குடியேற்றத்துக்காகக் காத்திருக்கிறார்.

    *என அடையாளத்தின் அங்கங்களான, பெண், ஹசாரா, ஷியா, பாரசீக மொழி பேசுபவர் போன்றவை குற்றங்களாகாது என்ற நிலமை எனது தாய்நாட்டிலும் ஒரு நாள் வரும் என்று நான் நம்புகிறேன்.

  • டெபெல்ஷா தாமஸ் மெக்ரூடர்

    அமெரிக்கா நிறுவனர் - மாம்ஸ் ஆஃப் பிளாக் பாய்ஸ் யுனைடெட்

    அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் கூட்டமைப்பை நடத்திவருபவர் இவர். மாம்ஸ் ஆஃப் பிளாக் பாய்ஸ் யுனைடெட் (MOBB) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, சட்ட அமைப்புகள் மற்றும் சமூகத்தால் கறுப்பின ஆண்கள் மற்றும் சிறுவர்கள் நடத்தப்படும் விதத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைகள் மற்றும் பார்வைகளை உருவாக்குவது தொடர்பான பணிகளை மேற்கொள்கிறது.

    இவர், தற்போது ஃபோர்டு அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பொருளாளராகவும் உள்ளார். அதன் உலகளாவிய செயல்பாடுகள் மற்றும் நிதியை மேற்பார்வையிடுகிறார்.

    முன்னதாக, இவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான துறைகளில் 20 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, எம் டிவி மற்றும் பிளாக் எண்டர்டெயின்மெண்ட் டெலிவிஷனில் ஊடகவியலாளராகவும் மூத்த தலைமைப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

    *பெருந்தொற்றிலிருந்து வெளியே வரும்போது உலகம் மிகவும் இரக்கமுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன். இதன்மூலம், நாம் ஒருவொருக்கொருவர் எப்படி சார்ந்து இருக்கிறோம் என்பதையும் மற்றவர்களின் அவலங்கள் மற்றும் சவால்கள் குறித்தும் நாம் அதிகம் உணர முடியும் என்பது என் நம்பிக்கை.

  • முலு மெஃப்சின்

    எத்தியோப்பியா செவிலியர்

    10 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியாகப் பணியாற்ரும் முலு மெஃப்சின் இப்போது எத்தியோப்பிவின் சண்டைக் களமான டீக்ரே பிராந்தியத்தின் தலைநகரான மெக்கெல்லேயில் உள்ள ஒரு மையத்தில் பணியாற்றுகிறார். இங்கு பாலியல் வன்கொடுமை, வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ, உளவியல், சட்டச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டீக்ரே பிராந்தியத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இயக்கத்தைத் தொடங்கினார். 2020-இன் பிற்பகுதியில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து இந்தப் பிரச்னை தீவிரமாக அதிகரித்து வருகிறது.

    தாமே அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், ஒரு நாள் அமைதி மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் மெஸ்ஃபின் தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.

    *எல்லா முரண்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆயுதங்களை விற்பனை செய்வதற்குப் பதிலாக அமைதிக்காகப் பணியாற்றும் நாடுகளைப் பெறுவதற்கும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரையும் சிறுமிகளையும் பெண்களையும் கொடுமைகளுக்கு உள்ளாக்குவோரையும் தண்டிக்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்தவும் உலகத்தை மீட்டமைக்க விரும்புகிறேன்.

  • மொஹதீஸ் மிர்ஸயீ

    ஆப்கானிஸ்தான் விமானி

    ஆப்கானிஸ்தானின் முதல் பெண் வணிக விமான விமான பைலட் என்ற பெருமைக்குரிய, மொஹதீஸ் மிர்ஸயீ, இந்த ஆண்டு தொடக்கத்தில் முற்றிலும் பெண்கள் இயக்கிய கம் ஏர் போயிங் 737 விமானத்தை வழிநடத்தியவர். 2020 செப்டம்பரில் ஒரு வணிக விமானியான பிறகு, துருக்கி, சவுதி அரேபியா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பறந்தார்.

    காபூலை தாலிபன்கள் கைப்பற்றியபோது, விமான நிலையத்தில் ஒரு விமானத்தை இயக்குவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார் மிர்ஸயீ. ஆனால் அந்த விமானம் புறப்படவேயில்லை. மாறாக ஒரு விமானியாக நாட்டை விட்டுவிட்டு, பறந்தார். “ஆண்களும் பெண்களும் ஒருங்கிணைந்து வேலை செய்யும் சமூகத்தில் சமத்துவம் உள்ளது" என்கிறார் மிர்ஸயீ.

    மீண்டும் பறக்க முடியும் என்று அவர் நம்புகிறார்

    *காத்திருக்காதீர்கள்! நீங்கள் வலிமையாக இல்லாவிட்டால், யாரும் வந்து உங்களுக்கு இறக்கைகளைத் தரமாட்டார்கள். நான் எனக்காகப் போராடினேன். நீங்கள் உங்களுக்காகப் போராடுவீர்கள். ஒன்றிணையும்போது நம்மைத் தடுக்க முடியாது.

  • ஃபஹிமா மிர்சாய்

    ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய சுழல் நடனக் கலைஞர்

    ஆப்கானிஸ்தானின் முதலாவது மற்றும் ஒரே இஸ்லாமிய சுழல் நடனக் கலைஞர். சூஃபி மத நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுகிறார். கலப்பு பாலின சூஃபி நடன இசைக்குழுவான சோஹு'ட் என்ற கலாசார மெய்ஞான அமைப்பை உருவாக்கினார். மெய்ஞான உள்ளுணர்வு என்று இதற்குப் பொருள்.

    கலப்பு-குழு நடவடிக்கைகள் இன்னமும் தடுக்கப்பட்டவையாக இருக்கும் ஓர் ஆழமான பாரம்பரிய மற்றும் மத சமுதாயத்தில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க நடனத்தை ஒரு வழியாகக் கருதுகிறார். நாடு முழுவதும் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம், ஆப்கானிஸ்தானில் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறார்.

    சூஃபி சுழல் நடனம் இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது எனஅறு தாலிபன்கள் கருதுவதால், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    *நான் என் ஆன்மீகத்தை முன்னிலைப் படுத்துவதை நம்புகிறேன்: நாம் நமக்குள்ளே அமைதியைக் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும், பின்னர் உள் அமைதி உலகம் முழுவதும் பரவும்

  • ட்லாலேங் மோஃபோகேங்

    தென்னாப்பிரிக்கா சுகாதார உரிமைக்கான ஐநாவின் அறிக்கையாளர்

    டாக்டர் டி என அன்புடன் அழைக்கப்படும் இவர் ஒரு மருத்துவர் மற்றும் பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான உரிமைகள் செயற்பாட்டாளர். உலகளாவிய சுகாதார அணுகல் ,ஹெச்.ஐ.வி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சேவைகளுக்கு ஆதரவானவர்.

    உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்கான உரிமைகள் தொடர்பான ஐநாவின் சிறப்பு அறிக்கையாளராக இவர் உள்ளார். இப்பதவியை வகிக்கும் முதல் பெண், முதல் ஆப்பிரிக்கர் மற்றும் இளம் வயதுடையவர் ஆவார். டாக்டர் டி: பாலியல் ஆரோக்கியம் மற்றும் இன்பத்துக்கான வழிகாட்டி (Dr T: A Guide to Sexual Health and Pleasure) என்ற, அதிகமாக விற்பனையாகும் புத்தகத்தை எழுதியவராவார்.

    மக்கள்தொகை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பாக இயங்கும் பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனம், 2016-ம் ஆண்டு, குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக இயங்கிய 40 வயதுக்கு உட்பட்டோருக்கு விருது வழங்கிய 120 பேரில் இவரும் ஒருவர் ஆவார்.

    *உலகம் எவ்வாறு மீட்டமைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்? சுய கவனிப்பை சமூக அன்பாக மாற்றுவதன் மூலம்.

  • தான்யா முஸிண்டா

    ஜிம்பாப்வே மோடோக்ராஸ் தடகள வீராங்கனை

    ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் மோடோக்ராஸ் அல்லது சாலைக்கு வெளியிலான மோட்டார் சைக்கிள் போட்டியில், களமிறங்கி, தன்னுடைய நாட்டின் சர்க்யூட்ஸ் சாம்பியனாக உருவெடுத்துள்ளார், தான்யா முஸிண்டா. 1957-ம் ஆண்டு இந்தப் போட்டி தொடங்கப்பட்டது முதல், சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜிம்பாப்வே பெண் தான்யா தான்.

    முன்னாள் பைக்கரான தன்னுடைய தந்தையைப் பார்த்துப் பெற்ற ஊக்கத்தால், ஐந்து வயதிலிருந்தே தன் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இப்போது தன்னுடைய 17 வயதில், முஸிண்டா, மோடோக்ராஸ் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முதல் கறுப்பின ஆப்பிரிக்கராக வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார். 2918-ம் ஆண்டு, ஆப்பிரிக்க யூனியன் இளையோர் பிரிவில் அந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

    மோடோக்ராஸ் மூலம் தனக்குக் கிடைக்கும் வருமானத்தில், பல்வேறு சமூக சேவைகளைச் செய்துவருகிறார். ஹராரேவில் அமைந்துள்ள பள்ளியில் 100 மாணவர்களைத் தன் மோடோக்ராஸ் வருமானத்தில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    *உலகத்தை மீட்டமைக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை - அது எப்போதுமே பூரணமாக இருந்ததில்லை. எப்போதுமே சில நன்மைகளும் சில தீமைகளும் இருந்துகொண்டேயிருக்கும். நிகழ்காலத்தை நாம் சரிசெய்வோம். அதன்மூலம், இப்போது நாம் எதற்கெல்லாம் சண்டையிடுகிறோமோ அதற்கெல்லாம் நம் எதிர்கால தலைமுறைகளும் சண்டையிட வேண்டிய தேவையிருக்காது.

  • சிமாமந்தா எங்கோஸி அடிச்சி

    நைஜீரியா எழுத்தாளர்

    புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர் மற்றும் பெண்ணியவாதி. இவருடைய எழுத்துப்பணிகள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்பியல் மற்றும் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெறுவதற்காக, தன் 19-வது வயதில் இவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார்.

    இவருடைய முதல் நாவல் பர்பிள் ஹைபிஸ்கஸ் (2003), எழுத்தாளர்களுக்கான காமன்வெல்த் விருதை வென்றது. 2013-ம் ஆண்டில் அவருடைய மற்றொரு நாவல் அமெரிக்கேனா (Americanah), தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட முதல் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்றாக இடம்பெற்றது.

    2012-ல் முக்கியத்துவம் வாய்ந்த டெட்டாக் உரையில், “நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்” என அவர் கூறியது, பெண்ணியம் தொடர்பான உரையாடல்களை உலகம் முழுவதிலும் தொடக்கிவைத்தது. மேலும் அவரின் இந்த உரை, 2014-ம் ஆண்டில் புத்தகமாக வெளியானது. தன் தந்தையின் எதிர்பாரா மரணத்தைத் தொடர்ந்து, அவருக்கு சமர்ப்பிக்கும் விதமாக 2021-ம் ஆண்டில் நோட்ஸ் ஆன் கிரீஃப் (Notes on Grief) என்ற புத்தகத்தை எழுதினார்.

    *உலகளவில் சுகாதாரப் பாதுகாப்பை மனித உரிமையாகக் கருதுவதற்கு இந்தத் தருணத்தைப் பயன்படுத்துவோம். ஒரு மனிதர் உயிருடன் வாழ்வதற்கு தகுதியானவர், அதனை விலை கொடுத்து வாங்குவதற்கு அல்ல.

  • லின் இங்குகி

    கென்யா பத்திரிகையாளர்

    TUKO எனப்படும் டிஜிட்டல் தளம் மூலம், பலதரப்பட்ட மனிதர்கள் தொடர்பான கட்டுரைகளை பிரசுரித்ததற்காக அறியப்பட்டவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்ள தன்னார்வலராக ஆரம்பத்தில் பணிபுரிந்தார். பின்னர், கிவோ ஃபிலிம்ஸ், அதன்பின் கத்தார் ஃபவுண்டேஷன் உடன் இணைந்து ஊடக உலகுக்குள் இணைந்தார். சமூக ஊடகத்தில் செல்வாக்குள்ள நபராகவும், அவருடைய நாட்டில் கொண்டாடப்படும் ஊடக ஆளுமையாகவும் உள்ளார்.

    2020-ம் ஆண்டுக்கான மனிதநேயப் பத்திரிகையாளர் விருதையும், இந்தாண்டுக்கான ஐ சேஞ்ச் நேஷன்ஸ் சமூகத் தூதுவர் விருதையும் வென்றுள்ளார்.

    *எல்லோரும் பாதுகாப்பாக உணரும் இடமாக உலகம் மீட்டமைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

  • அமண்டா இங்வீன்

    அமெரிக்கா சமூக தொழில்முனைவோர்

    பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ரைஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி.

    ஒரு சிவில் உரிமை ஆர்வலர் மற்றும் சமூக தொழில்முனைவோரான அமண்டா இங்வீன் 2013 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதன் பிறகு ரைஸ் அமைப்பை நிறுவினார். சாட்சியங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்க அவருக்கு ஆறு மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டது. பாலியல் தாக்குதல்களில் பிழைத்தவர்களுக்கு உரிமைகள் வழங்கும் சட்டத்தை உருவாக்க அவர் உதவினார். இது வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவரின் ஆதாரங்களை பாதுகாக்கும் உரிமையை அளிக்கிறது.

    2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் குறித்த அவரது காணொளி வைரலானது. இது ஸ்டாப் ஏசியன் ஹேட் இயக்கத்தின் முக்கிய தருணமாகும்.

    *நாம் ஒன்று சேர்ந்தால் யாரும் சக்தியற்றவர்கள் அல்லர். நாம் பார்க்கப்பட வேண்டும் என்று கோரும்போது யாரும் கண்ணுக்கு தெரியாதவர்கள் அல்லர்.

  • பாசிரா பாலிகாம்

    ஆப்கானிஸ்தான் பாலின சிறுபான்மையினர் செயற்பாட்டாளர்

    ஆப்கானிஸ்தானில் LGBTQ + உரிமைகளைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. சவால்கள் இருந்தபோதிலும்கூட, பாசிரா பைகாம் பாலின சமத்துவம் மற்றும் பாலின சமத்தும் மற்றும் பாலின சிறுபான்மையினர் ஆர்வலராக கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார்

    பாசிரா தனது சகாக்களுடன் சேர்ந்து பாலியல் விழிப்புணர்வு பற்றிய பட்டறைகளை நடத்தினார். பாலியல் கொடுமைகளுக்கு ஆளான LGBTQ+ சமூகத்தினருக்கு மருத்துவச் சிகிச்சைக்கான ஆலோசனைகளையும், நிதி உதவியையும் வழங்கினார். தற்கொலை அபாயம் நிறைந்த LGBTQ+ மக்கள் உளவியல் சிகிச்சை பெறவும் இவர்கள் உதவினர்.

    தற்போது அயர்லாந்தில் வசிக்கும் அவர், ஆப்கானிஸ்தானின் LGBTQ+ சமூகத்தை அங்கீகரிக்கவும், அவர்கள் உரிமையையும் சுதந்திரத்தையும் பெறவும் போராடுகிறார்.

    *ஆப்கானிஸ்தானின் மக்கள் தங்கள் மதம், பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு வகையைப் பற்றி சிந்திக்காமல், சுதந்திரமாக சுவாசிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம். அனைத்து வகையிலும் முயற்சி செய்து மனநிலையை மாற்றுவதில் வெற்றிபெறுவோம்.

  • நடாலியா பாஸ்டர்னாக் டாஷ்னெர்

    பிரேசில் நுண்ணுயிரியலாளர் மற்றும் அறிவியல் தகவல்தொடர்பாளர்

    கோவிட்-19 பேரிடரின்போது பிரேசிலில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு முக்கியமான, உயிர் காக்கும் அறிவியல் தகவல்களை, தனது பத்திரிகை செய்தியின் மூலமாகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாகவும் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

    அறிவியல் எழுத்தாளரும் நுண்ணுயிரியலாளருமான நடாலியா பாஸ்டர்னாக், சாவோ பாலோ பல்கலைக்கழகத்தில் பாக்டீரியல் மரபணுவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு, உலகப் புகழ்பெற நரம்பியல் விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான ஸ்டூவர்ட் ஃபையர்ஸ்டெய்ன் அழைப்பு விடுக்கும் அளவுக்கு அவருடைய பணியில் நேர்த்தி வித்திட்டது.

    பாஸ்டெர்னாக் அறிவியல் கேள்விக்கான நிறுவனம் என்ற பொதுக் கொள்கைகளோடு அறிவியல் ஆதாரங்களைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படும் லாபநோக்கமற்ற நிறுவனத்தின் தோற்றுநரும் ஆவார்.

    *இனப்படுகொலையின் பேத்தியாக, சர்வாதிகார அரசுகளால் மக்களை என்ன செய்யமுடியும் என்பதை நான் அறிவேன். பெருந்தொற்றுப் பேரிடரின்போது, அறிவியல் குறித்து பிரேசிலில் பேசுவது, மறக்கக்கூடாதவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் என்னுடைய பங்களிப்பு.

  • மோனிகா பவுலஸ்

    பப்புவா நியூ கினி மாந்த்ரீக வன்முறைக்கு எதிரான பரப்புரையாளர்

    மாந்த்ரீகம் தொடர்பான குற்றச்சாட்டுகள், தொடர்புடைய வன்முறைகளால் (SARV) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மனித உரிமை ஆர்வலரான மோனிகா பவுலஸ் ஹைலேண்ட்ஸ் பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர் நெட்வொர்க்கை இணைந்து நிறுவினார். இந்த அமைப்பு மாந்திரீகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு தங்குமிடம் மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குகிறது. அவர்களின் வழக்குகளை ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு தெரிவிக்கிறது.

    அந்த அமைப்பின் முயற்சிகளால் பப்புவா அரசாங்கம் மாந்த்ரீகம் தொடர்பான வன்முறைக்கு எதிரான குழுக்களை அமைக்க வழிவகுத்தது.

    2015 ஆம் ஆண்டில், பவுலஸ் ஐ.நா.வின் சாதனைப் பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது துணிச்சலுக்காக பெண்களுக்கான பப்புவா நியூ கினியின் விருதைப் பெற்றார். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆஸ்திரேலியா இவரை உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவர் என்று கூறியது.

    *நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளும் வகையில் மீட்டமைக்க வேண்டும். பாலினம் ஒருபோதும் நம்மைத் தடுக்கவோ அல்லது நமக்கு எதிராக நடத்தவோ கூடாது.

  • ரெஹானா போபல்

    ஆப்கானிஸ்தான் வழக்கறிஞர்

    குடியேற்றம் மற்றும் சிவில் சட்ட வல்லுநரான ரெஹானா தற்போது பிரிட்டிஷ் படையினர் விட்டுச் சென்ற ஆப்கானிஸ்தானின் உரைபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    பாரிஸ்டர் பட்டம் பெற்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பணியாற்றிய முதல் ஆப்கானிய பெண் ரெஹானா. 5 வயதாக இருக்கும்போது பிரிட்டனுக்கு ஒரு அகதியாக வந்து சேர்ந்தார். சர்வதேச அரசியல், சட்டம் ஆகியவை படித்து இப்போது மனித உரிமை வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.

    2019-இல் சட்டத் துறையில் ஊக்கமளிக்கும் பெண்களுக்கான விருதுகளில் "ஆண்டின் சிறந்த பாரிஸ்டர்" என்ற விருது ரெஹானாவுக்கு வழங்கப்பட்டது.

    *எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் கல்வி கற்கவும், வேலை பார்க்கவும் உரிமை பெற்றவர்களாக அச்சமின்றி வாழ முடியும் என்று நான் நம்புகிறேன்.

  • மஞ்சுளா பிரதீப்

    இந்தியா மனித உரிமை ஆர்வலர்

    இந்தியாவின் மிகவும் விளிம்புநிலையில் உள்ள சமூகங்களின் உரிமைகளுக்கான வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளர். குஜராத்தின் தலித் குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சுளா பிரதீப், சாதி மற்றும் பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான தனது பணிக்காக அறியப்படுகிறார். தலித் (முன்னர் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்) உரிமைகளுக்காகப் பணியாற்றும் இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான நவ்சர்ஜன் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக அவர் பணியாற்றினார்.

    இந்த ஆண்டு, தேசிய மகளிர் தலைவர்களின் குழுவை இணைந்து நிறுவினார். நாட்டின் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இளைஞர் பார்வை மற்றும் ஈடுபாட்டிற்கான வைஸ் ஆக்ட் என்ற அமைப்பையும் அவர் உருவாக்கினார்.

    இனவெறிக்கு எதிரான ஐ.நா. உலக மாநாட்டில் தலித் உரிமைகளை எடுத்துரைத்த, சர்வதேச தலித் ஒற்றுமை நெட்வொர்க்கில் உறுப்பினராக இருந்துள்ளார்.

    *தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் அமைதியான மற்றும் நியாயமான சமூகத்தை கட்டமைக்கும் பாதையில், இரக்கமும் அன்பும் கொண்ட உலகம் மீட்டமைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  • ரஸ்மா

    ஆப்கானிஸ்தான் இசைக்கலைஞர்

    ஒரு நிறைவான இசைக்கலைஞரான ரஸ்மா ஆண்களே பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு இசைக்கருவியை இசைக்கிறார். பிரபலமான இசைக்குடும்பத்தில் பிறந்து இசையிலும் கலையிலும் பட்டம் பெற்ற அவர், ஆப்கானிஸ்தானிலும் பிற நாடுகளிலும் முக்கிய இசைக்கலைஞர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.

    தன்னுடைய இசையின் மூலமாக ஆப்கானிஸ்தானின் மற்றொரு புறத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நம்பியிருந்ததாகக் கூறுகிறார் ரஸ்மா. மாறாக ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு இது இருளான ஆண்டாக அமைந்துவிட்டது. ஒரு இசைக்கலைஞராக இனி பாடவும் இசைக்கவும் முடியாது என்பது பேரிடியாக அமைந்திருக்கிறது.

    1996 முதல் 2001 வரை நாட்டைத் தாலிபன் ஆட்சி செய்தபோது, ​​இசை தடை செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இசைக்கலைஞர்களுக்கு அந்த வரலாறு திரும்பியிருப்பதாக ரஸ்மா அஞ்சுகிறார்.

    *இசையும் பாடலும் இல்லாத ஒரு சமூகத்தைப் பற்றி நினைக்கும்போது எனக்கு மேலும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. நமது நாட்டுப் பெண்களின் முடங்கிய குரல்கள் ஒரு முழக்கமாக மாற்றப்படலாம் என்று நான் நம்புகிறேன்.

  • ரோஹிலா

    ஆப்கானிஸ்தான் பள்ளி மாணவி

    தாலிபன்களின் உத்தரவின்படி மேல்நிலைப் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகளுள் ஒருவர் ரோஹிலா. அவருக்கு விருப்பமான பாடங்கள் அறிவியலும் ஆங்கிலமும். தனது சகோதரர்களுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்லும் ஏக்கம் அவருக்குள் நீடித்திருக்கிறது.

    தன்னுடைய நட்புவட்டத்தில் இருக்கும் சில பெண்களுக்கே இணைய வசதி கிடைக்கிறது என்று கூறும் ரோஹிலா, ஆசிரியர் இல்லாமல் தான் கற்றுக் கொள்ள சிரமப்படுவதாகக் கூறுகிறார்.

    உளவியல் படிக்க வேண்டும், உதவித் தொகை பெற்று வெளிநாட்டுக்குச் சென்று படிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு.

    *ஆப்கானிஸ்தான் இப்போது உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது கல்வியைத் தொடரும் எனது கனவுகள் நனவாகும் எனத் தோன்றவில்லை. சர்வதேச சமூகம் எங்களை மறக்காது என்றும் உழைப்பு வீண் போகாது என்றும் நம்புகிறேன்.

  • அல்பா ரீடா

    அர்ஜென்டினா திருநங்கை செயற்பாட்டாளர்

    தனது நாட்டில் உயரிய அரசுப் பதவியை வகித்த முதல் திருநங்கை அல்பா ரீடா. அர்ஜென்டினாவின் பெண்கள், பாலினம் மற்றும் பன்முகத்தன்மை அமைச்சகத்தின் பன்முகத்தன்மை கொள்கைகளின் துணைச் செயலாளராக உள்ளார்.

    ஓர் ஆர்வலர், கல்வியாளரான அல்பா ட்ரான்ஸ் வுமன் அர்ஜென்டினா என்ற அமைப்பின் முகம். இது திருநங்கைகள் மற்றும் எதிர்பால் தன்மை கொண்ட மக்களுக்கு பொதுத்துறை வேலைகளில் 1% ஒதுக்கும் மசோதாவுக்காக பரப்புரை மேற்கொண்டது. இந்த புதிய மசோதா நாடாளுமன்றத்தில் பெரும் ஆதரவைப் பெற்று 2021 ஜூன் மாதத்தில் சட்டமானது.

    தனது தேசிய அடையாள ஆவணத்தில் பெயர் மற்றும் பாலினத்துடன் பொருந்துமாறு தனது தேவாலய பதிவுகளை மாற்ற மறுத்ததற்காக 2019 ஆம் ஆண்டில் கத்தோலிக்க பேராயர் மீது அல்பா வழக்கு தொடர்ந்தார்.

    *ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளின் மீது பெரும் 2021-ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிற வகையான உறவுகளை உருவாக்கவும், கூட்டு மற்றும் சமூக அக்கறையை வளர்க்க அனுமதிக்கும் வகையிலான பெண்ணியவாதக் கண்ணோட்டத்துடன் கூடிய கொள்கைகளை (நாம் ஊக்குவிக்க வேண்டும்)

  • ருக்சானா

    ஆப்கானிஸ்தான் அறுவைச் சிகிச்சை நிபுணர்

    மருத்துவர் ருக்சனா ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணரும், உதவிப் பேராசிரியரும் ஆவார். சண்டைகளால் ஒரு மாகாணத்தில் இருந்து மற்றொரு மாகாணத்து இடம் பெயர்்து நோயாளிகளுக்கு அடிப்படை சிகிச்சை வழங்கும் ஒரு அமைப்பு நிறுவியிருக்கிறார்.

    பல்வேறு சண்டைக் காலங்களின்போது இருந்த பதற்றமான சூழல்களில் அவர் பணிபுரிந்திருக்கிறார். மிகவும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளோருக்கு மருத்துவ உதவிகள வழங்குகிறார். தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஒரு தன்னார்வலராகவும் பணியாற்றுகிறார். அந்த அமைப்பு இப்போது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    தனது அறுவைச் சிகிச்சைப் பணியில் உணர்வுப் பூர்வமாக ஈடுபடுகிறார். அது ஆப்கானிய மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் நம்புகிறார்.

    *ஒவ்வொரு பெரிய மாற்றமும் ஒரு தலைவரின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பின் பலனாகும். நான் ஒரு தலைவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, முடங்கிய, ஊழல் மிகுந்த சுகாதார அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்.

  • ஹலிமா சதாஃப் கரிமி

    ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி, முன்னாள் எம்.பி

    வடக்கு ஜௌஸ்ஜன் மாகாணத்தைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான ஹலிமா சதாப் கரிமி பல ஆண்டு அனுபவமுள்ள அரசியல்வாதி.

    நாட்டின் சுமார் 70 பெண் எம்.பி.க்களில் ஒருவராகவும், நாடாளுமன்றத்தின் உஸ்பெக் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணாகவும் இருந்தார். அங்கு தனது சமூகம் உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடினார். அவர் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஹலிமா. பெண்கள் உரிமைகளுக்காக ஒரு முக்கியமான செயற்பாட்டாளர். அவருக்கு தாலிபன்களிடமிருந்து பல அச்சுறுத்தல்கள் வந்தன. பல முறை இருப்பிடத்தை மாற்ற வேண்டியிருந்தது.

    2020 இல் பல்கலைக்கழக மாணவரான அவரது இளைய சகோதரர் தாலிபன்களால் கொல்லப்பட்டார்.

    *சுயநல அரசுகள் எப்போதும் விரைவான தோல்வியையே எப்போதும் சந்திக்கின்றன. அரசியல், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் முழுவதுமாகப் பங்கெடுத்துக் கொள்வதன் மூலமாக ஆப்கன் பெண்களுக்கு மனித உரிமைகள் கிடைக்கும். அது மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்கும் என்பது எனது நம்பிக்கை.

  • ரோயா சடாட்

    ஆப்கானிஸ்தான் திரை இயக்குநர்

    இரு தசாப்தங்களாக இத்துறையில் உள்ளார். ஆஸ்கர் விருதுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். தாலிபான் ஆட்சிக் காலத்திலிருந்து வந்த முதல் பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். ஆப்கான் பெண்கள், அவர்களது வாழ்க்கை மற்றும் அவர்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அவருடைய திரைப்படங்கள் பேசுகின்றன.

    2017-ம் ஆண்டில், அவர் இயக்கிய் ‘எ லெட்டர் டூ தி பிரெஸிடெண்ட்’ (A Letter to the President) என்ற திரைப்படம், 90-வது ஆஸ்கர் விருதுக்காக, ஆப்கான் சார்பில், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது.

    ரோயா (ROYA) திரைப்பட நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் ஆவார். இந்நிறுவனம், சுயாதீன திரைப்படங்களுக்கான நிறுவனமாகும். ஆப்கானிஸ்தானில் சர்வதேச மகளிர் திரைப்பட விழாவை நிறுவிய பெருமை இவருக்கு உண்டு. அதன் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

    *தாலிபான் ஆட்சிக்காலத்தின் முதல் 5 ஆண்டுகளில், அது முடிவுக்கு வந்துவிடும் என நான் நம்பினேன். எனது பள்ளியின் நுழைவுவாயில்கள் எனக்காகத் திறக்கப்படும் என நம்பினேன். இன்றும் சுதந்திரத்தின் குரல், மக்களின் குரல் வெற்றி பெறும் என நம்புகிறேன்.

  • ஷோகுஃபா சஃபி

    ஆப்கானிஸ்தான் இசைக்குழு நடத்துநர்

    முற்றிலும் 13 முதல் 20 வயதான பெண்களைக் கொண்ட ஆப்கானிஸ்தானின் முதல் இசைக்குழுவான ஸோஹ்ராவை வழிநடத்துகிறார் சஃபி. இவர்கள் சிலர் ஏழை வீடுகளில் இருந்தும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்தும் வந்தவர்கள்.

    பாரசீக பெண் தெய்வத்தின் பெயரைப் பெற்றிருக்கும் ஸோஹ்ரா இசைக்குழு, 2014-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் பாரம்பரிய இசை, மேற்கத்திய இசைக் கலவையை தேசிய மற்றும் சர்வதேச மேடைகளில் வழங்கியிருக்கிறது.

    ஒரு காலத்தில் சஃபி பயிற்சி செய்த ஆப்கானிஸ்தான் தேசிய இசைப் பள்ளி தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பிறகு மூடப்பட்டுள்ளது. அவரும் அவரது சில சகாக்களும் தோஹாவுக்கு தப்பி வந்தாலும் - இசைக்கருவிகளை ஆப்கானிஸ்தானிலேயே விட்டுவர வேண்டியிருந்தது - மீண்டும் சேர்ந்து இசையமைக்க ஏங்கியிருக்கிறார்கள்.

    *நம்பிக்கை ஒருபோதும் தோற்காது. முழுமையான இருளிலும், எனது கையில் இருக்கும் இசைக்குச்சி நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஆப்கானிஸ்தானுக்கான ஒளியாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

  • சாஹர்

    ஆப்கானிஸ்தான் கால்பந்து வீராங்கனை

    ஆப்கானிஸ்தானில் கால்பந்து விளையாட விரும்பும், ஆனால் தாலிபன்கள் ஆட்சியால் விளையாட முடியாத பல இளம் பெண்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து ஆடும் சாஹர், விளையாட்டின் மூலம் பல நண்பர்களைப் பெற்றார்.

    தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு குடும்பத்துடன் மறைவிடத்தில் பதுங்கியிருந்தார். பின்னர் புதிய நாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

    அவர் தனது சக பெண் வீராங்கனைகளை நாட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறார். ஆயினும் ஒரு நாள் கால்பந்து ஆடுகளத்துக்குத் திரும்ப முடியும் என்று நம்புகிறார்.

    *நான் எனது கல்வியைத் தொடரவும், இலக்குகளை அடைய கடுமையாக முயற்சித்து என்னைக் குறித்து எனது குடும்பம் பெருமையடையும் வகையில் செய்யவும் விரும்புகிறேன். நான் வெற்றியை விரும்புகிறேன். அப்போதுதான் பெண்களால் கால்பந்து ஆட முடியாது என்று ஒருவரும் கூறமாட்டார்கள்.

  • சோமா சாரா

    பிரிட்டன் நிறுவனர் - ‘Everyone’s Invited’

    பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்களுக்கான ‘Everyone’s Invited’ எனும் வைரலான இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் இணையதளத்தை 2020 ஜூன் மாதம் சோமா சாரா நிறுவினார். பிரிட்டன் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், பாலியல் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை அனாமதேயமாகப் பகிர்ந்து கொள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கும் தளமாக இது செயல்படுகிறது.

    தொடங்கியதில் இருந்து சுமார் 50 ஆயிரம் கதைகளைச் சேகரித்திருக்கும் இந்தத் தளம், 2021 மார்ச்சில் லண்டனில் கடத்தப்பட்ட சாரா எவரார்டின் கொலைக்குப் பிறகு பிரபலமடைந்தது.

    கல்வி நிறுவனங்களுக்கு அப்பால் தமது பரப்புரையை விரிவுபடுத்தவும், பரந்திருக்கும் பெண் வெறுப்புக் கலாசாரத்தை எதிர்த்துப் போராடவும் இயலும் என சோமா நம்புகிறார்.

    *பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்களின் குரலை உலகம் கேட்கவும், அவர்களை ஆதரிக்கவும், நம்பவும் வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  • மஹ்பூபா செராஜ்

    ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமை ஆர்வலர்

    26 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த பிறகு கடந்த 2003-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினார் மஹ்பூபா. அப்போதுமுதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காக பல்வேறு அமைப்புகளை நிறுவினார். ஆப்கானிஸ்தான் பெண்கள் நெட்வொர்க் என்ற ஆப்கானிஸ்தானின் பெண்கள் இயக்கத்துக்கு அடிக்கல்லாக இருக்கும் அமைப்பும் இவற்றில் அடங்கும்.

    குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்விக்காகப் போராடுகிறார். ஊழலை எதிர்க்கிறார். 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான் அதிகாரத்திற்கு வந்த பிறகும், தனது மக்களுடனேயே தங்கி, ஆப்கன் பெண்களின் பிரச்னைகளுக்காக சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் துணிச்சலாகக் குரல் கொடுக்கிறார்.

    ‘2021-ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 10 பேர்’ என்ற டைம் இதழின் பட்டியலில் அவர் இடம்பிடித்திருக்கிறார்.

    *அமைதிதான் எனது நாட்டுக்கான எனது முதல் விருப்பம். எனது சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்களில் நான் எதிர்காலத்தை நோக்கிய அச்சத்தைப் பார்க்க விரும்பவில்லை. போதும் போதும்!

  • எலிஃப் ஷஃபாக்

    பிரான்ஸ் நாவலாசிரியர்

    விருது பெற்ற துருக்கி-பிரித்தானிய எழுத்தாளர், பெண்கள் மற்றும் LGBTQ+ சமூகத்தினரின் உரிமைக்கான வழக்கறிஞர்.

    எலிஃப் ஷஃபாக், புக்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற ‘இந்த வினோதமான உலகத்தில் 10 நிமிடங்கள் 38 விநாடிகாள்’ மற்றும் பிபிசியின் ‘இந்த உலகை வடிவமைக்கும் 100 புனைகதை’ என்ற பட்டியலில் இடம்பிடித்த தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆஃப் லவ் ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார். இவர் இதுவரை 19 நூல்களை வெளியிட்டுள்ளார். இவருடைய நூல்கள் ஐம்பதுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    ஷஃபாக் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். துருக்கி, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடம் எடுத்துள்ளார். கதை சொல்லும் கதையை புதுப்பிப்பதில் இவருடைய பங்களிப்பிற்காக ஹால்டோர் லக்ஸ்னெஸ் சர்வதேச இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கிழக்கு மற்றும் மேற்கு என்று அனைத்து திசைகளிலும், நாம் குறுக்குத் தெருக்களில் நிற்கிறோம். பழைய உலகம் இப்போது இல்லை - பின்னோக்கிச் செல்ல முயல்வதற்குப் பதிலாக, யாரையும் கைவிடாத, சிறந்த மற்றும் பண்பான உலகத்தை உருவாக்குவோம்.

  • அனிசா ஷாஹித்

    ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்

    ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான செய்தியாளர்களில் ஒருவரான அனிசா, மனித உரிமை மீறல்கள், அரசியல், ஊழல் ஆகியவை தொர்பான செய்திகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கியிருக்கிறார். நாட்டின் செல்வாக்கு மிக்க டோலோ நியூஸ் தொலைக்காட்சிக்காக பணியாற்றிய அவர் களத்தில் இருந்து பிரேக்கிங் செய்திகளை வழங்கியவர்.

    பத்திரிகையாளர் என்பதாலும் பெண் என்பதாலும் அவருக்கு நேரடியாக மிரட்டல்கள் வந்தன. ஆகஸ்ட் 15-இல் தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 2020-ஆம் ஆண்டில் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு கொரானா பரவலின்போது அவரது துணிச்சலான செய்தி சேகரிக்கும் செயலை அங்கீகரித்தது.

    2021-ஆம் ஆண்டில் “பேச்சு சுதந்திரத்தின் முகம்” என்ற பெருமையை ஆப்கானிஸ்தானின் பேச்சு சுதந்திர மையம் வலையமைப்பு வழங்கியது.

    *புலப்பெயர்வு மற்றும் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானை அமைதியாகப் பார்ப்பேன் என்று நம்புகிறேன். பெண்களும் பெண்களும் புன்னகைப்பார்கள் என்று நம்புகிறேன். எனது தாய்நாடு, எனது வீடு, எனது வேலைக்குத் திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.

  • மினா ஸ்மால்மேன்

    பிரிட்டன் பாதிரியார் மற்றும் கல்வியாளர்

    இங்கிலாந்து தேவாலயத்தில், சிறும்பான்மை இனத்திலிருந்து பேராயராக 2013-ம் பதவியேற்ற முதல் பெண் இவர்தான். தற்போது ஓய்வுபெற்ற பாதிரியாராகவும் பள்ளி ஆசிரியராகவும் இருக்கிறார். மினா ஸ்மால்மேன் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தெருக்களைப் பாதுகாப்பானதாக்க காவல்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர பிரச்சாரம் செய்து வருகிறார்.

    2020-ம் ஆண்டு அவருடைய இரண்டு மகள்கள் கொலை செய்யப்பட்டார்கள். நிக்கோல் ஸ்மால்மேன் மற்றும் பிபா ஹென்ரி ஆகிய இருவரையும் லண்டன் பூங்காவில் 19 வயதான ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். முதல்கட்டமாக தன் பெண்களைக் காணவில்லை என்று புகார் கொடுத்தபோதே காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்டு, ஒருவேளை நடவடிக்கை எடுத்திருந்தால், அவருடைய பெண்கள் இன அடையாளப்படுத்துதல் மற்றும் வகுப்புவாதத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று காவல்துறையைக் கடுமையாக விமர்சித்தார்.

    தன் மகள்களைக் கொன்ற நபரை மன்னித்துவிட்டதாகக் கூறும் அவர், “ஒருவர் மீது நாம் வெறுப்பைச் சுமந்திருப்பது அவர்களை மட்டுமல்ல நம்மையும் பாதிக்கும். ஏனெனில் நம்மை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் சூழ்ந்திருக்கும். இதன்மூலம் அவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை நான் கொடுக்க மறுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    *ஓர் ஆசிரியராக, பாதிரியாராக, என்னுடைய வாழ்வை மக்கள் கீழாகப் பார்க்கும் குழந்தைகளை வளர்க்க அர்ப்பணித்துவிட்டேன். உங்களைப் பாகுபாட்டோடு நடத்துவதைப் பார்த்தால் உங்களில் ஒவ்வொருவருமே அதற்கு எதிராகப் பேசவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நம்மால் மாறமுடியும்.

  • பார்பரா ஸ்மோலின்ஸ்கா

    போலாந்து ரீபார்ன் சுகர் பேபீஸ் - நிறுவனர்

    மீஉயர் உண்மைத்தன்மை கொண்ட "மறுபிறப்பு" பொம்மைகள் கருச்சிதைவும் மற்றும் குழந்தை இழப்பைக் கடந்து செல்ல உதவுகின்றன. சிலருக்கு மனப்பதற்றம், மன அழுத்தம், கருத்தரிப்புப் பிரச்னைகளை கையாளவும் உதவுகின்றன. பொம்மை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பாளரான பார்பரா ஸ்மோலின்ஸ்கா சிகிச்சைக் கருவிகளாகப் பயன்படும் வகையிலான உண்மை அளவைக் கொண்ட குழந்தை பொம்களை உருவாக்குகிறார்.

    ஒரு முன்னாள் இசைக்கலைஞர், அழகுசாதனத் துறையில் பயிற்சி பெற்றவர். ரீபார்ன் சுகர் பேபீஸ் என்ற நிறுவனத்தை நிறுவியவர். அவரது கைவினைப் பொம்மைகள் திரைப்படங்களிலும், மருத்துக் கல்வி நிறுவனங்களில் மருத்துவர்கள், செவிலியர், செவிலித்தாய் போன்றோர் பயிற்சி பெறவும் பயன்படுகிறது.

    தனது கலையில் ஸ்மோலின்ஸ்கா தீவிர வேட்கை கொண்டவர். தனது படைப்புகள் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன் அவர்களது மன நலத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என்று நம்புகிறார்.

    *மக்கள் இன்னும் கருணை கொண்டவர்களாகவும், வெளிப்படையான, மாறுபாட்டுக்குச் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏராளமான பெண்களுக்கு உதவும் பொம்மை சிகிச்சையுடன் இது பொருந்தும்.

  • அயின் சோ மே

    மியான்மர் ஜனநாயக ஆதரவுச் செயற்பாட்டாளர்

    ராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட பிறகு, அயின் சோ மே (அவரது சொந்தப் பெயர் அல்ல) அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கப்படும் வரை ஆறு மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ராணுவ விசாரணை மையங்களில் ஒன்றிலும் மோசமான இன்செய்ன் சிறையிலும் அவர் வைக்கப்பட்டிருந்தார். அந்தக் காலகட்டம் கொடுமையாக இருந்ததாகவும், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் விவரிக்கிறார்.

    அவரது மாணவ நாட்களில் இருந்து, பல இயக்கங்கள் மற்றும் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பிறகு, பிப்ரவரி மாதத்தில் நடந்த "pots and pans" போராட்டத்திலும் மார்ச்சில் நடந்த "silence strike" போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

    விடுதலையானதும் தனது அரசியல் நடவடிக்கைகளை மீளத் தொடங்கிவிட்டார்..

    *நாம் வெற்றிகரமாகத் பெருந்தொற்றுக் காலத்தைக் கடக்க வேண்டும், ஓர் அமைதியான சமூகத்தை உருவாக்க வேண்டும். உலகின் அனைத்து சர்வாதிகார அரசுகளும் தூக்கி எறியப்பட வேண்டும், உண்மையான, அமைதியான ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.

  • பைபர் ஸ்டேஜ் நெல்சன்

    அமெரிக்கா பொது உத்திகள் அதிகாரி - தி சேஃப் அலையன்ஸ்

    டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள தி சேஃப் அலையன்ஸ் அமைப்பில் தலைமை பொது உத்திகள் அதிகாரியாக இருக்கும் நெல்சன் குழந்தைகள் கொடுமை, பாலியல் தாக்குதல், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

    ஆறு வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க முடியாது என மாநிலத்தின் சட்டம் தடை செய்வதால், கருக்கலைப்பு சேவைகளை அணுக முடியாத நிலையில் இருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு இந்த அமைப்பு ஆலோசனை வழங்குகிறது.

    ஸ்டேஜ் நெல்சன் பெண்கள் மற்றும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். மிச்சேல் ஒபாமாவின் லெட் கேர்ள்ஸ் லேர்ன் என்ற இயக்கத்துக்கும் அரசியலில் பெண்களின் வெற்றியை அதிகரிக்கும் இலக்குடன் செயல்படும் ஆன்னி லிஸ்ட் அமைப்புடனும் பணியாற்றுகிறார்.

    *கோவிட்-19 ஏற்கெனவே ஒரு சமூக மாற்ற மீட்டமைப்பைச் செய்திருக்கிறது. எது முக்கியமானவை பற்றி பேசுவதற்கு அதிகாரம் பெற்றிருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். இப்போது சவால் என்னவென்றால், உடல் சுயாதீனம் மற்றும் ஒப்புதல் பற்றி ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைக்குக் கற்றுத் தருவதுதான்.

  • ஃபாத்திமா சுல்தானி

    2019 இல் மலை ஏற்றத்தை பொழுதுபோக்காகத் தொடங்கிய ஃபாத்திமா சுல்தானி, மலையேறுவதில் ஆப்கானிய பெண்களுக்கு ஆர்வமூட்டுவதையே தனது பணியாக மாற்றிக் கொண்டார்.

    இந்துகுஷ் மலையில் 7,492 மீட்டர் உயரம் கொண்ட நோஷாக் சிகரத்தில் தனது 18 வயதில் ஏறியபோது ஆப்கானிஸ்தானின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏறிய குறைந்த வயதுப் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். ஒன்பது பேர் கொண்ட ஆப்கானிய மலையேறும் குழுவில் அவர் பங்கேற்றிருந்தார். அவர்களில் மூன்று பேர் பெண்கள்.

    விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட வீராங்கனையான சுல்தானி கடந்த ஏழு ஆண்டுகளாக குத்துச்சண்டை, டேக்வாண்டோ மற்றும் ஜியு ஜிட்சு ஆகிய விளையாட்டுகளுக்கான தேசிய அணிகளில் இடம்பெற்றிருக்கிறார்.

    *ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் விடுதலை மற்றும் உரிமைகளுக்காக 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். உயரமான மலைகளில் ஏறி பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள உயர்ந்த மலைகளில் மீண்டும் ஏற முடியும் என்று நம்புகிறேன்.

  • அடிலெய்ட் லாலா டாம்

    சீீனா வடிவமைப்பாளர்

    உணவுடனான நமது நவீனகால உறவின் அடிப்படையில் வாழ்க்கைத் தேர்வுகளை ஆய்வு செய்யும் அடிலெய்ட் லாலா, ஒரு ஓவியரும் உணவு வடிவமைப்பாளரும் ஆவார்.

    சீனாவில் பிறந்த அடிலெய்ட் லாலா நிரந்தர ஹாங்காங் குடியுரிமை பெற்று தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். அவரது ஓவியங்கள் தொழில்துறை உணவு உற்பத்தியை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்கின்றன. நுகர்வோர்கள் தாங்கள் சாப்பிடுவதையும் அதன் உற்பத்தியில் அவர்களது பொறுப்பையும் மறு மதிப்பீடு செய்யத் தூண்டுகிறது.

    2018 ஆம் ஆண்டு எதிர்கால உணவு வடிவமைப்பு விருதுகளில் நடுவர் குழு மற்றும் பொதுமக்கள் தேர்வு ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றார். பசுவைக் கொல்லும் முறையைப் பிரதிபலிக்கும் வகையிலான கலப்பு-ஊடக படைப்புக்காக இந்த விருதுகள் கிடைத்தன. சமையல் நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நபர்களை அடையாளம் காட்டும் 2021 இன் ‘50 நெக்ஸ்ட்’ பட்டியலில் இவரும் இடம்பெற்றிருக்கிறார்.

    *2021 இல் உலகம் நிறைய மாறிவிட்டது. இப்போது நாம் என்ன சாப்பிடுகிறோம், அது எப்படி நமது மேசைக்கு வருகிறது என்பது குறித்த கருணையை உலகம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  • சகோதரி ஆன் ரோஸ் நு தாங்

    மியான்மர் கத்தோலிக்க கன்னியாஸ்திரி

    கத்தோலிக்க கன்னியாஸ்திரியான ரோஸ், மியான்மரை ராணுவம் கைப்பற்றிய பிறகு தேவாலயத்தில் தஞ்சமடைந்த போராட்டக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக காவலர்கள் முன் மண்டியிட்ட பிறகு, போராட்டங்களின் அடையாளமாகவே மாறிவிட்டார்.

    பயங்கர ஆயுதங்களை ஏந்திய காவல்துறை அதிகாரிகளை தனது பாணியில் எதிர்கொண்ட அவரது புகைப்படம் 2021 மார்ச்சில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. பரவலாகப் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

    பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சகோதரி ஆன் ரோஸ் நு தாங் பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். அவர் ஒரு செவிலித் தாய் பயிற்சி பெற்றவர். இருபது ஆண்டுகளாக சேவை வாழ்க்கை மேற்கொண்டு வருகிறார். மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை கவனித்து வருகிறார்.

    *மியான்மரில் நடந்ததை மனம் உடைந்து பார்த்திருக்கிறேன். என்னால் ஏதாவது செய்ய முடிந்தால், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எந்த விசாரணையும் இன்றி விடுவிப்பேன். பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவரையும் சமமாக்குவேன்.

  • எம்மா தியோஃபிலஸ்

    நமீபியா அரசியல்வாதி

    கடந்த ஆண்டு, தன்னுடைய 23 வயதிலேயே ஆப்பிரிக்காவின் இளம் அமைச்சரவை உறுப்பினராகப் பதவியேற்றார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையின் துணை அமைச்சராகவும் எம்மா இனமுடிலா தியோஃபிலஸ் இருக்கிறார். அதோடு, நாட்டின் கோவிட்-19 குறித்த அதிகாரபூர்வ தகவல் தொடர்புப் பணியையும் வழிநடத்துகிறார்.

    அதற்கு முன்பு, அவர் இளம் சமூக ஆர்வலராக, பாலின சமத்துவம், குழந்தைகளின் உரிமை, நீடித்த நிலைத்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். மேலும், இளைஞர்களின் நாடாளுமன்றத்தின் பேச்சாளராகவும் அவர் பிறந்த ஊரான விண்ட்ஹோக் நகரத்திற்குத் துணை மேயராகவும் இருந்துள்ளார்.

    தியோஃபிலஸ் நமீபியா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க பெண்ணியம் மற்றும் பாலினக் கல்வியில் பயின்றுள்ளார்.

    *விரைவுபடுத்துவதன் மூலம் உலகம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும்: நாமும் நம் கையிலேயே பல ஆண்டுகளாக முடங்கியிருக்கும் திட்டங்களை அமல்படுத்துவதில் வேகமெடுக்க வேண்டும். தாமதப்படுத்தும் அளவுக்கு நம்மிடம் நேரமில்லை. சொல்லப்போனால், நாம் இருக்கும் நேரத்தை இழந்துகொண்டிருக்கிறோம்.

  • சாரா வாஹேதி

    ஆப்கானிஸ்தான் Ehtesab நிறுவன தலைமைச் செயல் அதிகாரி

    ஆப்கானிஸ்தானின் புதிய தொழில்நுட்ப நிறுவனமான Ehtebsab-இன் நிறுவனர். காபூல் மக்களுக்கு பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான எச்சரிக்கைகள் வழங்கும் செயலியே அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. IED எனப்படும் மேம்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள், பொதுவிடத்தில் அடிப்பது, வீடுகளில் சோதனை ஆகிவை பற்றி நம்பகமான தகவல்களை வழங்க முடியும் என இந்தச் செயலி நிரூபித்துள்ளது.

    2022 இல், கிராமப்புற மக்களுக்கும் இந்தச் சேவை கிடைக்கும் வகையில், குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும் வசதியை வழங்க முடியும் என சாரா நம்புகிறார்.

    தொழில்நுட்ப தொழில்முனைவோரான இவர், 2021-ஆம் ஆண்டு டைம் இதழின் 'அடுத்த தலைமுறை தலைவர்கள்' பட்டியலில் இடம்பிடித்தவர். தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் தரவு விஞ்ஞானம் படித்து வருகிறார்.

    *ஆப்கானியர்கள் சுதந்திரமான நியாயமான தேர்தல்களையும் தேர்தல் அமைப்பையும் கோரி ஒருமித்த குரல் எழுப்ப வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்த நிலைக்குச் செல்ல, சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கான பொதுக் கல்வி மற்றும் மருத்துவத்துக்காக போராடுவதில் தீவிரமான செயல்பாடு அவசியம்.

  • வேரா வாங்

    அமெரிக்கா நாகரிக வடிவமைப்பாளர்

    1970களில் இருந்து நாகரிக வடிவமைப்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு முக்கிய திருமண ஆடை வடிவமைப்பாளரான வேரா எலன் வாங் தனது வணிகத்தை வாசனை, பிரசுரம், வீட்டு வடிவமைப்பு, இன்னும் பலவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியுள்ளார்.

    சீனப் பெற்றோருக்கு நியூயார்க்கில் பிறந்தவர். வோக் இதழில் மூத்த நாகரிகப் பிரிவு எடிட்டராக இருந்தார். பின்னர் ரால்ப் லாரனில் வடிவமைப்பு இயக்குநராக பணியாற்றினார். ஃபிகர் ஸ்கேட்டிங் விளையாட்டில் திறமையான அவர், தனது பதின்பருவம் முழுவதும் தொழில்முறையாகப் போட்டியிட்டார்.

    அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர்ஸ் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளார் வாங். இந்த அமைப்பு 2005 ஆம் ஆண்டில் சிறந்த பெண் ஆடை வடிவமைப்பாளராக வாங்கை அறிவித்தது.

    *நாம் அனைவரும் ஒரே மாதிரியான அம்சங்களால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறோம். அறிவார்ந்த மற்றும் இருத்தலியல் வழியில் கிரகத்தை காப்பாற்றும் முயற்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

  • நான்ஃபு வாங்

    சீனா படத் தயாரிப்பாளர்

    சீனாவின் தொலைதூரக் கிராமத்தில் இருந்து வந்து விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளரான நான்ஃபு, இப்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார்.

    அவரது 2016 அறிமுகமான படமான ஹூலிகன் ஸ்பாரோ, ஒரு "சிறந்த முழுநீள ஆவணப்படம்" என்ற பிரிவில் அகாடமி விருது இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டது. One Child Nation (2019), கொரோனாவுக்காக சீன மற்றும் அமெரிக்க அரசுகள் எப்படி எதிர்வினையாற்றின என்பதைக் கூறும் In the Same Breath (2021) ஆகிய படங்களை அவர் இயக்கியிருக்கிறார்.

    வறுமையுடன் வளர்ந்த வாங், ஷாங்காய், ஒஹையோ, நியூ யார்க் பல்கலைக்கழகங்களில் மூன்று முதுநிலைப் பட்டங்களைப் பெற்றவர். "சர்வாதிகார ஆட்சி, ஊழல், பொறுப்புணர்வுக் குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்யும் நெருக்கமான பாத்திரங்களை உருவாக்கியதற்காக" அவருக்கு மேக்ஆர்தர் மேதை விருது 2020-இல் வழங்கப்பட்டது.

    *சாதாரணமான நிலை திரும்ப வேண்டும் என்று முழு உலகமும் ஆவலுடன் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் சாதாரணமான நிலை என்று நாம் கருதும் சூழல்தான் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமைக்கு காரணமானது.

  • ரோஷனக் வார்டக்

    ஆப்கானிஸ்தான் மகளிர் நல மருத்துவர்

    நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மகளிர் நல மருத்துவருமான ரோஷனக் வார்டக் கடந்த 25 ஆண்டுகளாக பெண்களுக்கு மருத்துவச் சேவைகளை அளித்து வருகிறார். தாலிபன்களின் முதல் ஆட்சியின்போது மைதான் வார்டக் மாகணத்தில் பணியாற்றிய ஒரேயொரு பெண் மருத்துவர் இவர்தான்.

    2001 ஆம் ஆண்டில் தாலிபன்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பல கிராமப்புறங்களைப் போல அவரது மாவட்டமும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாலிபன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நேட்டோ படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையே கடுமையான மோதலைக் கண்ட பகுதி இது.

    யுத்தம் முடிந்து தாலிபன் ஆட்சியைக் கையகப்படுத்தியதை ஒரு கனவு போல உணர்ந்ததாக அவர் பிபிசியிடம் கூறினார். "ஊழல்வாதிகளை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நாளுக்காகக் காத்திருந்தேன்" என்றார் அவர். ஆயினும் சமீபத்தில் பள்ளிகளைத் திறப்பதற்காகக் கவனம் செலுத்தினார். தாலிபன்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றாததால் பெண்கள் கல்விக்காக குரல் எழுப்பி வருகிறார்.

    *ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தவர்களை தேசத்துக்கு எதிரான செயல்களுக்காகப் பொறுப்பாக்குவதுதான் ஆப்கானிஸ்தானுக்கான எனது ஒரே நம்பிக்கை.

  • மிங்-நா வென்

    மக்காவ் நடிகை

    முலன் (1998) மற்றும் முலன் II (2004) ஆகிய அனிமேஷன் திரைப்படங்களில் ஃபா முலானின் குரலுக்குச் சொந்தக்காரர் மிங்-நா வென். பிரபலமான அமெரிக்க மருத்துவ படமான ER மற்றும் ஆசிய-அமெரிக்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் மிகச் சில அமெரிக்க தொலைக்காட்சி தயாரிப்புகளில் ஒன்றான Inconceivable தொடரிலும் நடித்துள்ளார்.

    தற்போது அவர் டிஸ்னி+ தொடரான ​​தி மாண்டலோரியனில் ஃபெனெக் ஷாண்ட் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவர் வரவிருக்கும் தொடரான ​​தி புக் ஆஃப் போபா ஃபெட்டிலும் நடித்திருக்கிறார். 2019-ஆம் ஆண்டில் டிஸ்னி லெஜண்ட் என்ற பெருமையைப் பெற்றார்.

    2022 இல் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் தரையில் ஒரு நட்சத்திரத்தைப் பெற இருக்கிறார்.

    *மீட்டமைப்பது உண்மையான விருப்பத்தேர்வு அல்ல. அதனால் ஏன் பின்னோக்கிச் செல்ல வேண்டும்? எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காகவே நடக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு புதிய நாளும் மீட்டமைக்கப்படும். எனவே இன்று நன்றியுடன் வாழுங்கள்.

  • ரெபெல் வில்சன்

    ஆஸ்திரேலியா நடிகை, எழுத்தாளர், தயாரிப்பாளர்

    நடிகை, எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என ஹாலிவுட்டில் மெகா ஸ்டார். சட்டப் பட்டதாரி. அவரது நடிப்பு வாழ்க்கை சிட்னி மேடைகளில் தொடங்கியது. அங்கு அவர் தனது சொந்த படைப்புகளை நிறைய எழுதினார். 2010 இல் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு ஆஸ்திரேலிய நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார்.

    பெண்ணை மையப்படுத்திய நகைச்சுவை வெற்றிப் படமான ப்ரைட்ஸ்மெய்ட்ஸில் அவரு ஹாலிவுட் பயணம் தொடங்கியது. ஆஸ்கார் விருது பெற்ற ஜோஜோ ராபிட்டிலிலும் அவர் நடித்தார். ஆனால் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான இசை முப்படத் தொடரான பிட்ச் பெர்ஃபெக்டில் ஃபேட் ஆமி என்ற பாத்திரமே பிரபலமானது. (முத்தொகுப்பின் இரண்டாவது படமாக 2015-ஆம் ஆண்டில் இது வெளியானபோது அதிகமாக வசூல் செய்த இசை நகைச்சுவைப்படம் என்ற பெருமையைப் பெற்றது)

    2022 இல், வில்சன் தனது முதல் திரைப்படத்தை இயக்கப் போகிறார்.

    *பன்முகத்தன்மை, மரியாதை மற்றும் உள்ளடக்கு பண்பு ஆகியவை வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் சமரசத்துக்குட்படாததாக இருக்க வேண்டும்.

  • பெனாஃப்ஷா யாக்கூபி

    ஆப்கானிஸ்தான் மாற்றுத் திறனாளி செயற்பாட்டாளர்

    பார்வை மாற்றுத் திறனாளிகளான யாக்கூபியும் அவரது கணவரும் ரஹ்யப் என்ற அமைப்பை நிறுவி ஆப்கானிஸ்தானின் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்தார். மனித உரிமை ஆர்வலரான யாக்கூபி, நாட்டின் சுயாதீன மனித உரிமை ஆணையத்தின் ஆணையராகப் பணியாற்றினார். பார்வை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தினார்.

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு, நாட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும் தாலிபன்களால் புறக்கணிக்கப்படுவாக அவர் அஞ்சும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

    சண்டைகள் உள்ளிட்ட காரணங்களால் சராசரியாக அதிக மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அணுகலும், பாகுபாடும் இன்னும் தீராப் பிரச்னைகளாக இருக்கின்றன.

    *நம்பிக்கை இருக்கிறதென்றால், என்னைப் பொறுத்தவரை, நாடு மீண்டும் சுதந்திரமாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் வளர்ச்சியடைய வேண்டும்.

  • மலாலா யூசஃப்சாய்

    பாகிஸ்தான் இணை நிறுவனர் - மலாலா நிதியம்

    நோபல் அமைதிப் பரிசு பெற்று இளம் வயதுடையவரான மலாலா, சிறுமிகள் கல்விக்கான செயற்பாட்டாளரும் ஐநாவின் அமைதிக்கான தூதருமாவார். 11 வயது முதலே இளம் பெண்களின் கல்வி உரிமை பற்றி பேசிவருகிறார்.

    பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி பிபிசிக்கு எழுதிய வலைப்பதிவுகளுடன் அவரது செயற்பாடுகள் தொடங்கின. 2012-ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏறிய துப்பாக்கி ஏந்திய நபர் அவரைத் தேடிவந்து தலையில் சுட்டார்.

    குணமடைந்த பிறகு, லாபநோக்கற்ற மலாலா நிதியம் என்ற அமைப்பை இணைந்து உருவாக்கினார். ஒவ்வொரு பெண்ணும் அச்சமின்றிக் கற்றுக் கொள்ளவும் வழிநடத்தவும் பணிகளைத் தொடர்ந்தார்.

    *இன்று பலநூறு மில்லியன் கணக்கான பெண்கள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. ஒவ்வொரு பெண்ணும் 12 ஆண்டுகள் இலவச, பாதுகாப்பான மற்றும் தரமான கல்வியை பெறக்கூடிய ஓர் உலகத்தை நான் பார்க்க விரும்புகிறேன். அதில் எல்லா பெண்களும் படிக்கவும் வழிநடத்தவும் முடியும்.

  • யூமா

    துருக்மெனிஸ்தான் உளவியல் மருத்துவர்

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஓரினச் சேர்க்கையாளர்களின் பெருமையைக் கொண்டாடும் வகையிலான் சூப்பர் மார்க்கெட் விளம்பரத்தில் பங்கேற்றதற்காக, அவருடைய குடும்பத்தினர் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். உளவியல் ஆலோசகரும் LGBTQ ஆர்வலருமான, யூமா இப்போது ஸ்பெயினில் வசிக்கிறார்.

    யூமா (தன்னுடைய குடும்பப் பெயரை ரகசியமாக வைக்குமாறு கேட்டுக்கொண்டார்), 2013-ம் ஆண்டு மரபுக்கு விரோதமான பாலுறவுகளைத் தடை செய்யும் இயற்றிய “ஓரினச் சேர்க்கை பரப்புரை” சட்டத்தைத் தொடர்ந்து LGBTQ+ குறித்துக் குரல் எழுப்பும் ஆர்வலரானார்.

    2017-18 ஆண்டில் ரஷ்ய காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறும் செச்சினியாவைச் சேர்ந்த LGBT மக்களுக்கு யூமா உளவியல் உதவியை வழங்குகிறார். ரஷ்யாவில் நடக்கும் LGBT திருவிழாக்களையும் நிகழ்வ்களையும் ஆதரிக்கிறார்.

    *கட்டாயத்தால் தனிமைப்படுத்தப்படும் போதுதான் நெருங்கிய உறவுகளின் முக்கியத்துவம் தெரிகிறது. நம் அன்புக்குரியவர்களுக்காக் உலகில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பார்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

  • ஜலா ஸசாய்

    ஆப்கானிஸ்தான் காவல் அதிகாரி

    கிளர்ச்சிக் குழுக்களின் செயல்பாட்டினால் பெருமளவு உருக்குலைந்த ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் காவல்துறை குற்றவியல் புலனாய்வுத் துறையின் முதல் பெண் துணைத் தலைவர். நாட்டின் சுமார் 4 ஆயிரம் பெண் காவல்துறை அதிகாரிகளுள் ஒருவர். துருக்கிய காவல்துறை பயிற்சிமையத்தில் பயிற்சி பெற்றவர்.

    பணியின்போது போது ஆண் சகாக்களிடம் இருந்தே அச்சுறுத்தலை எதிர்கொண்டார், அத்துடன் கிளர்ச்சியாளர்களிடமிருந்து கொலை மிரட்டல்களும் வந்தன.

    தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக வாழும் காவல்துறை பெண் அதிகாரிகளின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருகிறார்.

    *பாரம்பரிய ஆணாதிக்க சமூகத்துக்கு சவால் விடுக்கும் வகையில், மீண்டும் எனது சீருடையை அணிய வேண்டும் என்பதே எனது கனவு. வேலை செய்வதற்கு உரிமை இல்லாத ஆப்கானிஸ்தான் பெண்களுக்காக மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்.