டாக்டர் கூல்
இந்த முழு அமைப்பையும் உருவாக்கிய, டாக்டர் சௌத் அப்துல் கானி பிபிசியிடம், “கால்பந்தாட்ட வீரர்கள் தங்கள் நாட்டுக்கு சென்ற பிறகும் அவர்கள் நீண்ட காலத்திற்குப் தங்கள் நாட்டிற்கு சேவை செய்ய கத்தார் ஒரு பாரம்பரியத்தை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார்.
“அவர் "வெப்ப வசதி" பற்றி பல வருட விரிவான ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இது அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களுக்கு இனிமையான சூழலை உருவாக்குகிறது. 2019 இல் கத்தாரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுடனான உரையாடல்கள், உலகக் கோப்பையில் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பயனளிக்கும் வடிவமைப்பை உருவாக்க உதவியது” என குறிப்பிடுகிறார்
ஒரு விளையாட்டு வீரரின் பார்வை
கத்தாரின் தேசிய மகளிர் கால்பந்து அணியின் டிஃபெண்டரும், 11 வயதிலிருந்தே கால்பந்து வீரராக திகழும் ஹஜர் சலேவை பிபிசி அணுகியது. தீவிரமான சூழ்நிலையில் உயர்மட்ட விளையாட்டை விளையாடுவதற்கான அனைத்து கோரிக்கைகளையும் அவர் அறிவார். ஈரப்பதம் மிகப்பெரிய சவால் என்று அவர் கூறுகிறார்.
நாம் சூடான சூழலில் இருக்கப் பழகிவிட்டோம். ஆனால் நீங்கள் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் இணைக்கும்போது விஷயங்கள் மிகவும் கடினமாகிவிடும். ஹஜர் சலே
புதிய ஏர் கண்டிஷனிங் அமைப்புகளான கலீஃபா மற்றும் எஜுகேஷனல் சிட்டி ஸ்டேடியம் ஆகிய இரண்டு புதிய மைதானங்களில் விளையாடிய முதல் அனுபவத்தை ஹஜர் பெற்றுள்ளார்.
“கத்தாரில் நிலவும் ஆண்டின் வெப்பமான மாதங்களில் ஒன்றான ஜூன் மாதத்தில் விளையாடும்போது இது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார்.
இந்த அமைப்பு இயற்கையை பாதிக்காததா?
கத்தார் 2022 இன் அமைப்பாளர்கள், முழு அரங்கங்களையும் குளிர்விக்கும் சக்தி கூடுதல் பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏற்படுத்தாது என்று உறுதியளிக்கின்றனர். ஏனெனில் மின்சாரம் சூரிய சக்தி வசதியிலிருந்து வருகிறது.
ஆனால் முழு போட்டியும் கார்பன் நியூட்ரலாக இருப்பதை உறுதிசெய்வது மிகவும் துணிச்சலான இலக்காகும்.
8,00,000 டன்கள் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட 'உருவாக்கப்பட்ட' கார்பனின் அளவு (அரங்கங்களை கட்டும் போது உற்பத்தி செய்யப்படும் உமிழ்வுகள்) அரங்குகளின் ஒட்டுமொத்த கார்பன் தடத்தில் 90% ஆகும். இது ஒரு பயணிகள் காரை உலகம் முழுவதும் 80,000 முறை ஓட்டுவதற்குச் சமம் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியின் உமிழ்வு கால்குலேட்டர் தெரிவித்துள்ளது.
மைதானங்களுக்கு அப்பால் பார்க்கும்போது, ரசிகர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்லும் விமானங்கள் உட்பட, உலகக் கோப்பைக்கான போக்குவரத்தின் தாக்கம் பரவலாக உள்ளது.
போட்டியின் கச்சிதமான தன்மை, மைதானங்களுக்கு இடையே குறுகிய தூரம் மட்டுமே இருப்பதால், கத்தாரில் உள்ள தளங்களுக்கிடையேயான பயணத்தின் உமிழ்வு ரஷ்யா 2018 இல் வெளியானதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஃபிஃபா கூறுகிறது.
கத்தாரின் பசுமை வாக்குறுதிகள், ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அனைத்து CO2-ஐ ஈடுசெய்ய கார்பன் ஆஃப்செட்டிங் பயன்படுத்தப்படும் என்று கூறுகின்றன.
அவர்கள் இதை எப்படி அடைவார்கள் என்று இதுவரை தெளிவாக தெரியவில்லை. உலகக் கோப்பை உமிழ்வை ஈடுகட்ட, ஆற்றல் திறன், கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மரங்களை நடுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாக ஃபிஃபா கூறுகிறது. இருப்பினும், திட்டங்களின் இறுதித் தேர்வு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இத்தகைய திட்டங்கள் கார்பனைப் பிடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம். சமீபத்திய பிபிசி புலன் விசாரணை கார்பனை ஈடுசெய்யும் வகையில் நடப்பட்ட சில காடுகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக வெளிக்கொண்டு வந்தது.
எனவே, கத்தார் உண்மையில் அதன் பசுமை இலக்குகளை அடைந்துவிட்டதா அல்லது வளங்குன்றா நிலை குறித்த அதன் கூற்றுக்கள் உண்மையா என்பதை நாம் உறுதியாகத் தீர்மானிக்க சிறிது நேரம் ஆகும்.
30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விளையாட்டரங்கைக் கட்டியதில் அதிக மனித இழப்புகள் உண்டானது குறித்த விமர்சனங்களை அந்த நாடு இன்னும் தடுக்கிறது. கட்டுமானத்தின்போது ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கடுமையாக காயமடைந்தனர். கட்டாய உழைப்பு, கடினமான வேலை நிலைமைகள், மோசமான வீடுகள், கொடுக்கப்படாத ஊதியம் மற்றும் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
கத்தார் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. மேலும் 2017 முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக வெப்பத்தில் வேலை செய்வதிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் வேலை நேரத்தை குறைக்கவும் தொழிலாளர் முகாம்களில் நிலைமைகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது என்று வலியுறுத்துகிறது. இருப்பினும், கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பையுடன் தொடர்புடைய கட்டுமானப் பணிகளில் பங்கேற்றவர்களில், 2021ஆம் ஆண்டில் மட்டும், 50 தொழிலாளர்கள் இறந்தனர்; 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு சேகரித்த தரவுகள் கூறுகின்றன. பாலைவன நாடான கத்தாரில் சாதனைகளின் உண்மைத்தன்மை தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டிருக்கும் என்பதைக் காட்டும் களத்திற்கு வெளியே உள்ள பிரச்னை இது.